வெள்ளி, 5 ஜனவரி, 2018

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்க தடை கோரும் புகார்கள் ... காவிஅரசு மீது ஏன் இந்த காய்ச்சல்?

மின்னம்பலம் :கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட இருப்பதாகவும் அவருக்கு அளிக்கக்கூடாது என்றும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் ஞானபீட விருது அளிக்கும் நிர்வாகத்தினருக்குச் சென்றிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
புகார் பீடமாகும் ஞானபீடம்!இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஞானபீட விருது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 16 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு இது வழங்கப்படுகிறது. இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் ஒப்புதல் மற்றும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளின்படி இவ்விருது அறிவிக்கப்படும். தமிழில் இதுவரை ஜெயகாந்தன், அகிலன் ஆகிய இருவர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தச் செய்திகளுக்கு தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும் இலக்கிய விமர்சகருமான ஜெயமோகன் தனது வலைதளப் பக்கத்தில் எதிர்வினை ஆற்றியிருந்தார். “வைரமுத்து இவ்வங்கீகாரத்தைப் பெறுவார் என்றால் அது தமிழுக்கு இழிவு. இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், அதன்பொருட்டு கருத்துத்தெரிவிக்கும் துணிவுமுள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பை ஆங்கிலத்தில் எழுதி ஞானபீட அமைப்பின் செயலருக்கு அனுப்ப வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்தார். இந்த நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் ஞானபீட விருது அளிக்கும் நிர்வாகத்தினருக்குச் சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கக் கூடாது என்று குரல் எழுப்புவர்களில் முக்கியமானவர் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். “தமிழில் மிகவும் தரம் குன்றியவை வைரமுத்துவின் எழுத்துகள். இலக்கிய மதிப்பற்றவை. இலக்கிய மதிப்பு கொண்ட பல படைப்பாளிகள் வாழுகிற மொழி தமிழ். வைரமுத்து தேர்வு செய்யப்படுவது தமிழையும், பிற தமிழ் படைப்பாளிகளையும் அவமதிப்பதற்குச் சமம். வைரமுத்துவுக்கு ஞானபீடம் கிடைப்பது தமிழுக்கு அவமானம் எனக் கருதுவோர் தங்களின் கருத்துகளைப் புகார் எழுதி அனுப்பி வைக்கவும். இப்புகாரில் நடவடிக்கை கோருவதற்கு மேலும் ஐம்பது வாக்குகள் தேவை. அவமானத்தைத் தடுத்து நிறுத்த வாக்களியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: