ஞாயிறு, 19 நவம்பர், 2017

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதா?: மீனவர்கள் ...நிர்மலாவுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்

தினேஷ் ராமையாvikatan :  Chennai: நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு மீனவர்களைத் தாக்கிய குண்டு எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை என்று கூறுவதா என அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது புகைப்படத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ‘மீனவர்கள் மீது பாய்ந்த குண்டு இந்திய கப்பற்படையைச் சேர்ந்தது இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லுகிறார். ஆனால், கப்பற்படையைச் சேர்ந்த தளபதிகளும், வீரர்களும் பாதிக்கப்பட்ட ராமேஸ்வரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களிடத்திலே சென்று தவறுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையிலேயே மீனவர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சரோ முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறுவது சரியல்ல. அவர் உண்மையை அறிந்து பேச வேண்டும்’ என்றார்.

கருத்துகள் இல்லை: