வியாழன், 23 நவம்பர், 2017

அன்புசெழியன் அதிமுக மதுரை வடக்கு அல்லது கிழக்கில் தேர்தலில் நிற்க முயற்சித்தவர்

மின்முரசு :மதுரை : தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மதுரையில் நேற்றிரவு நிருபர்களிடம்  கூறியதாவது: சினிமா தயாரிப்போர் அனைவரும் வட்டிக்கு கடன் வாங்கித்தான் படம் தயாரிக்கிறோம். வெற்றுப்பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்துத்தான் பணம் வாங்க முடிகிறது. ஒரு மாத வட்டி செலுத்த இயலவில்லை என்றால், அதனை அடுத்த மாதமே செலுத்தி விடுகிறோம். அப்படி இருக்கும்போது அசோக்குமார் மிரட்டப்பட்டு, பலியாகி இருக்கிறார். கந்துவட்டிக்கு பலியான அசோக்குமாரின் மரணம்தான், கடைசி மரணமாக இருக்க வேண்டும். இவர் மரணத்திற்கு காரணமான அன்புச்செழியனுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்.
அமைச்சர் ஒருவரின் (பன்னீர்) ஆதரவில், அன்புச்செழியன் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார். சம்பந்தப்பட்ட பைனான்சியருக்கு ஆதரவாக அமைச்சர்களோ, அதிகாரிகளோ யார் வந்தாலும் அவர்களையும் நாங்கள் சும்மா விட மாட்டோம். அசோக்குமாரின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவரது மரணத்திற்கு காரணமான அன்புச்செழியன் மீது பல வழக்குகள் உள்ளன. இப்படி பல வழக்குகள் இருந்தும் அவர் சுதந்திரமாகத் திரிகிறார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து அறிவிப்போம்.
இவ்வாறு தெரிவித்தார்.


தேர்தலில் நிற்க அதிமுகவில் சீட் கேட்டவர்

மதுரை  அன்பு என்கிற அன்புச் செழியன்  சினிமா வினியோகஸ்தராக தனது முகத்தை சினிமா  உலகில் காட்ட ஆரம்பித்தார். பிறகு பைனான்சியர், தயாரிப்பாளர் என மாறினார்.  தற்போதைய அமைச்சர்கள் 2 பேருக்கு மிகவும் நெருக்கமானவர் அன்புச் செழியன்.  முன்பு அதிமுகவில் மதுரை நகர் மாவட்டத்தில் பொறுப்பில்  இருந்தவர்.  கடந்த  சட்டசபை தேர்தலில் மதுரை கிழக்கு, வடக்கு சட்டமன்ற  தொகுதியில் சீட் வாங்க  கடுமையாக முயன்று வந்தார். இவர் மீது இருந்த சில வழக்குகளையும் குற்றப்  பின்னணி இருப்பதையும் உளவுத் துறை அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தகவல் தந்தது. இதையடுத்து அவருக்கு சீட் மறுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: