புதன், 11 மே, 2016

ஷீனா போராவை தாய் இந்திராணிதான் கொலை செய்தார்... டிரைவர் சாட்சியம்

இந்திராணி முகர்ஜி. | கோப்புப் படம்.
இந்திராணி முகர்ஜி. | கோப்புப் படம்.
‘‘ஷீனா போரா கொலையில் அப்ரூவராக விரும்புகிறேன். இந்திராணிதான் ஷீனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்’’ என்று நீதிமன்றத்தில் டிரைவர் ஷியாம்வர் ராய் வாக்குமூலம் அளித்தார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இளம்பெண் ஷீனா போரா (24) கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக அவரது தாய் இந்திராணி முகர்ஜி, இவரது 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.


பீட்டர், கன்னா, ராய் ஆகிய 3 பேரும் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையிலும், இந்திராணி பைகுலா பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தான் அப்ரூவராக மாறி உண்மைகளை சொல்ல விரும்புவதாக ஷியாம்வர் ராய் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சிபிஐ நீதிமன்றத்துக்கு 2 பக்க கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, ஷியாம்வர் ராயை புதனன்று மும்பை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். வழக்கை சிபிஐ சிறப்பு நீதிபதி எச்எஸ். மகாஜன் விசாரித்தார்.

அப்போது ஷியாம்வர் ராய் கூறும்போது, ‘‘காரில் இந்திராணி, 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, ஷீனா போராவை அழைத்துச் சென்றேன். அப்போது, இந்திராணிக்கும் ஷீனாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த இந்திராணி, ஷீனாவின் கழுத்தை நெரித்தார். அதில் அவர் இறந்துவிட்டார். எனக்கு நிர்பந்தமோ, மிரட்டலோ இல்லை. நானாகவே உண்மைகளை சொல்கிறேன். அந்த சம்பவத்துக்காக மனம் வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்’’ என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கில் ஷியாம்வர் ராய் அப்ரூவராக மாற விரும்பும் கோரிக்கைக்கு, வரும் 17-ம் தேதி பதில் அளிக்க சிபிஐ.க்கு நீதிபதி மகாஜன் உத்தரவிட்டார். மேலும், பீட்டர் முகர்ஜியின் ஜாமீன் மனுவுக்கு 13-ம் தேதி பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றம் உத்தரவிட வேண்டியிருக்கும் என்று சிபிஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டார்.   /tamil.thehindu.com/in

கருத்துகள் இல்லை: