செவ்வாய், 10 மே, 2016

புது தில்லி டாக்சி ஓட்டுநர்கள் போரட்டம் ! பசுமை தீர்ப்பாயம் காபரெட் முதாளிகளின் அடியாளா?

வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கும்பல் யமுனை நதிக் கரையைச் சூறையாடியது. வாழும் கலை கோஷ்டியினர் ’கலாச்சார’ நிகழ்ச்சி நடத்தி யமுனை நதியை மாசுபடுத்தியதற்காக விதிக்கப்பட்ட ஐந்து கோடி அபராதத்தையும் கட்டவில்லை. எங்கே போயிற்று பசுமை தீர்ப்பாயம்?  
தலைநகர் தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் டாக்சிகள் இயங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். தில்லி மாநகரின் காற்று மாசுபாட்டு அளவு அதிகரித்துள்ளதற்கு டீசல் வாகனங்களே காரணம் என்கின்றன சூழலியல் தன்னார்வக் குழுக்களும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும். பத்தாண்டுகள் பழமையான டீசல் வாகனங்களைப் பதிவு செய்யக் கூடாது, பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்களின் பயன்பாட்டைத் தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தேசிய பசுமைத் தீர்பாயம் விதித்துள்ளது.

இந்நிலையில், சி.என்.ஜி பொருத்தாத வாடகை வாகனங்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கிறது கடந்த 30-ம் தேதி உச்ச நீதிமன்ற இட்ட உத்தரவு. இதையடுத்துக் களமாடக் கிளம்பிய தில்லி போலீசு, டாக்சி ஓட்டுனர்கள் கடந்த இரண்டு நாட்களாக நடத்தும் மறியல் போராட்டங்களைக் கண்டு விழி பிதுங்கி நிற்கின்றது. பரபரப்பான தில்லி – நோய்டா நெடுஞ்சாலை மற்றும் தில்லி – கூர்காவ்ன் நெடுஞ்சாலைகள் டாக்சி ஓட்டுனர்களின் மறியல் போராட்டத்தின் விளைவாக மூடப்பட்டது.
தலைநகர் தில்லியில் இயங்கும் வாடகை கார்களில் டீசல் வண்டிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50000 ஆகும். தில்லியைச் சுற்றியுள்ள நோய்டா, கூர்காவ்ன், பரிதாபாத் மற்றும் காசியாபாத் பகுதிகளைச் சேர்ந்த கீழ் நடுத்தரவர்க்கப் பிரிவினரே வாடகை வாகன ஓட்டிகளாக பணிபுரிகின்றனர். சாதாரணமாக ஒரு பெட்ரோல் வாகனத்திற்கு சி.என்.ஜி பொருத்த பதினைந்திலிருந்து இருபதாயிரம் வரை செலவாகிறது. டீசல் வாகனங்களுக்கு சி.என்.ஜி பொருத்துவதற்கு நம்பகமான தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லாத நிலையில் இதற்கான செலவுகளை எதிர்கொள்வது அன்றாடங் காய்ச்சிகளான டாக்சி ஓட்டுனர்களுக்கு சாத்தியமானதல்ல.
’பசுமையின்’ மீது பேரார்வம் கொண்ட இதே பசுமைத் தீர்பாயத்தின் மூக்கு நுனியின் கீழ் தான் சமீபத்தில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கும்பல் யமுனை நதிக் கரையைச் சூறையாடியது. வாழும் கலை கோஷ்டியினர் ’கலாச்சார’ நிகழ்ச்சி நடத்தி யமுனை நதியை மாசுபடுத்தியதற்காக விதிக்கப்பட்ட ஐந்து கோடி அபராதத்தையும் கட்ட மறுத்து பசுமைத்தீர்ப்பாயத்தின் முகத்தில் கரியைப் பூசி அனுப்பினார் ஸ்ரீ ஸ்ரீ.
போக்குவரத்து நெரிசல் - புது டில்லி
போக்குவரத்து நெரிசல் – புது டில்லி
டாக்சி ஓட்டுனர்களிடம் மீசை முறுக்கும் பசுமைத் தீர்ப்பாயத்தின் கரிபடிந்த மூஞ்சியில் சாணத்தைப் பூசுகின்றனர் நாடெங்கும் இயற்கை வளங்களை சூறையாடி வரும் கார்ப்பரேட் முதலாளிகள். மதுரையின் மலைகளைக் காக்க ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியே சுடுகாட்டில் காவலிருந்த போது பசுமைத் தீர்பாயமும் உச்ச நீதிமன்றமும் பூமிக்குள் தலையைப் புதைத்துக் கொண்டதை நாடே பார்த்தது. ஆற்று மணல், நிலத்தடி நீர், கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை முதலாளிகள் வல்லுறவு செய்வதை அரசின் பொருளாதாரக் கொள்கை ’வளர்ச்சி’ என்கிறது.
தில்லியின் காற்று மாசுபாட்டிற்கு பெட்ரோல், டீசல் வாகங்கள் ஒரு காரணமென்றாலும் அவை மட்டுமே தனிச்சிறப்பான காரணம் அல்ல. அதே தில்லியில் தான் ஆபத்தான கதிர்வீச்சை விளைவிக்கும் உலகின் மின்னணுக் கழிவுத் தொட்டியான மாயாபுரியும் உள்ளது. அதே தில்லியில் தான் எந்தச் சூழலியல் விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் ரியல் எஸ்டேட் முதலைகளால் கட்டப்பட்ட வானுயர்ந்த கட்டிடங்கள் நிற்கின்றன.
நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆசையூட்டி வங்கிக் கடன்களை வாரி வழங்கிக் விலையுயர்ந்த கார்களை அவர்கள் தலையில் கட்டிய போது மக்களின் மேல் அக்கறை கொள்ளாத பசுமைத் தீர்பாயமும் உச்சநீதிமன்றமும் இப்போது தான் துயிலெழுததைப் போல் நடிக்கின்றன.
சாராய உற்பத்தியையும் விற்பதையும் தடைசெய்யாமல் குடிப்பவனை தூக்கில் போடுவது நியாயமா?. பொதுப்போக்குவரத்து திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதும், வரன்முறையற்ற கார் கடன்களும், போலியாக ஏற்றி விடப்படும் நுகர்வு வெறியுமே தனியார் வாகனப் பயன்பாடு அதிகரிப்பதற்குக் காரணம்.
எனில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் யார்?  vinavu.com

கருத்துகள் இல்லை: