புதன், 11 மே, 2016

எம்.பி. தேர்தல் போல 144 தடையுத்தரவு தேவையில்லை. அதிகாரிகளைக் கொண்டே சீராக பண விநியோகத்தை...

இன்னும் சில நாட்களில் வாக்குப்பதிவு என்கிற நிலையில், அரசியல் கட்சிகள் படுதீவிரமாக வாக்கு சேகரிக்கின்றன. கூட்டணி பலம், தலைவர்களின் பிரச்சாரம் இவற்றைக் கடந்து ஒவ்வொரு பூத்வாரியான செயல்பாடுகள்தான் இறுதிக்கட்ட சூழலைத் தீர்மானிக்கும். அந்த  அடிப்படையில் அ.தி.மு.க.வும்  தி.மு.க.வும் எப்படி செயல்படுகின்றன. மாற்று அணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிய களமிறங்கினோம். அ.தி.மு.க.வின் கூட்டணி பார்ட்னர்களாக தேர்தல்  பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள் செயல்படுவது தெரியவந்தது. தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கப் போராடுவதும் தெரிந்தது. மற்ற அணிகள் தத்தமது பலத்திற்கேற்ப செயல்படுகின்றன.எடுத்துக்காட்டாக, திருச்சி கிழக்குத் தொகுதி 25-வது வார்டின் நிலவரத்தை ஆராய்ந்தோம். துரைசாமிபுரம், கீழப்புதூர், காஜாப்பேட்டை என்று மூன்று மிக முக்கியமான பகுதிகள் கொண்ட இந்த வார்டில் சுமார் 8500 வாக்காளர்கள் இருக்கி றார்கள். இவர்களில் கிறிஸ்தவ வெள்ளாளர், இந்து பிள்ளைமார், முஸ்லிம், கோனார்,  அருந்ததியர் தலித், முத்துராஜா, செட்டியார், என்று பல வகை சமூக மக்களும் இணக்கமாக வாழ்கிறார்கள். மாநகராட்சி  தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி வெற்றி பெற்று வந்த நிலையில், தற்போது அ.தி.மு.க. வசம் உள்ளது.



இங்கு அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் வட்டச்செய லாளர்,  அவைத்தலைவர், துணைச் செயலாளர் 2 பேர், பொரு ளாளர், துணைத்தலைவர், வட்ட பிரதிநிதி 2 பேர்,  8 பேர்  என கட்சியின் முக்கிய  பொறுப்பாளர்கள். இது இல்லாமல் இளைஞர் பாசறை 9 பேர், இளம் பெண்கள் பாசறை 9 பேர், அம்மா பேரவை 9 பேர், மகளிர் அணி 9 பேர்  என்று 45 பேர் இருக்கிறார்கள். இது இல்லாமல் ஒரு வார்டுக்கு குறைந்தது 7 பூத் முதல் 12 பூத் கமிட்டி இருக்கும்... இதில் ஒவ்வொரு பூத்திற்கும் 20 பேர் வரை போட்டிருக்கிறார்கள். ஆக, ஒரு வார்டில் குறைந்தது 160 பேர் அ.தி.மு.க.வுக்காக வேலை செய்கிறார்கள். தி.மு.க.வைப் பொறுத்தவரை வட்டச் செயலாளர், அவைத்தலைவர், துணைச்செயலாளர் 3 பேர், பொருளா ளர், வட்ட பிரதிநிதி 5 பேர் என்று 11 பேர் கட்சி பொறுப்புகளில் இருக்கிறார்கள். இது இல்லாமல் இளைஞர் அணி 6 பேர், தொண்டர் அணி 2 பேர், மகளிர் தொண்டர் அணி 2 பேர், மாணவர் அணி, மகளிர் அணி, சிறுபான்மையினர்  அணி, கலை இலக்கிய பேரவை என்று 45 பேர் இருக்கிறார்கள். அத்துடன் ஒரு பூத் கமிட்டிக்கு 10 பேர் வீதம் 8 பூத் கமிட்டி நியமித்திருக் கிறார்கள். எல்லாரையும் சேர்த்தால் 140 பேர் வேலை செய்கிறார்கள்.அ.தி.மு.க.வில் உள்ளதுபோல இளைஞர் -இளம்பெண் பாசறை என்ற அமைப்பு தி.மு.க.வில் இல்லாததால் கட்சி வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அ.தி.மு.க.வைவிட குறைவாக இருப்பதுடன், பெரும்பாலான வர்கள் நடுத்தர வயதினராக இருக்கிறார்கள். அதே நேரத் தில், இதனை ஈடுசெய்யும் வகையில் கூட்டணிக் கட்சி யினர் தி.மு.க. பக்கம் இருக் கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் வார்டு தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் 2, பொரு ளாளர், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வார்டு தலைவர், துணைத்தலைவர் 2 பேர், செயலாளர், துணைச்செய லாளர் 2 பேர், பொருளாளர், என்று பொறுப்பாளர்கள் மட்டும் 24 பேர் இருக்கிறார் கள். ஒருசில வார்டுகளில் இந்தளவு ஆட்கள் இருப்ப தில்லை. எனினும், த.மு.மு.க. வினர், முஸ்லிம் லீக் பிரமுகர் கள் சில வார்டுகளில் இதனை ஈடு செய்கிறார்கள். இந்த பலத்துடன் அ.தி.மு.க.விடம் மல்லுக்கட்டுகிறது தி.மு.க.



மக்கள் நலக் கூட்டணி யைப் பொறுத்தவரை, தே.மு. தி.க. சார்பில் வட்டச் செயலா ளர், தலைவர், துணைச்செய லாளர் 3 பேர், பொருளாளர் வட்ட பிரதிநிதி 5 பேர் என்று 11 பேர் கட்சிப் பொறுப்பு களில் இருக்கிறார்கள். தொண்டர் அணி 3 பேர், இளைஞர் அணி 3 பேர், மாணவர் அணி 3 பேர், மகளிர் அணி 3 பேர், இது இல்லாமல் கிளைக் கழகம் என்று 6 பேர் இருக்கிறார்கள். ம.தி.மு.க. சார்பிலும் நிர்வாகிகள் இருக்கிறார்கள். சி.பி.எம். சார்பில் இந்த வார்டில் பகுதி பொறுப்பாளர் ஒருவர், கிளைச் செயலாளர் ஒருவர், இளைஞர்  சங்கம் (டைஃபி) தலைவர், கிளைச் செயலாளர் என்று 4 பேர் இந்த வார்டில் இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரே ஒரு வட்டச் செயலாளர் இருக்கிறார். பொதுவாக, இந்தக் கூட்டணிக்கு எல்லா வார்டுகளி லும் ஒரே அளவிலான நிர்வாகிகள் இருப்பதில்லை. பி.ஜே.பி. சார்பில் இந்த வார்டில் தலைவர் 5 கிளைக் கழகங்கள்... அதில் தலா  6 பேர் என 37 பேர் இருக்கிறார்கள். இதுதான் ஒரு வார்டில் கட்சி களுக்கு உள்ள பலம். மாநக ராட்சி, நகராட்சி, ஊராட்சி இவற்றில் இந்த பலம் மாறுபடும். பா.ம.க.வுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில், அவர்களுக்கான நிர்வாகிகள் களப்பணியாற்று கிறார்கள். நிர்வாகிகளின் எண் ணிக்கைப்படி அ.தி.மு.க.வும் தி.மு.க.வும்தான் பல வார்டுகளிலும் பலமாக உள்ளன. ஆட்சி மீதான அதிருப்தி, தி.மு.க.வுக்கு சாதகமாகக்கூடிய நிலையில், அதனைத்  தடுப்ப தற்கு  பணபலத்தை நம்பி, கச்சித மாகப் பட்டுவாடா செய்யத் தொடங்கிவிட்டது அ.தி.மு.க.  கிராமப்புற தொகுதிகளில் ஒரு ஓட்டுக்கு 250 ரூபாய், நகரப் பகுதிகளில் 500 ரூபாய் என நிர்ணயித்து, மொத்தமுள்ள வாக்காளர்களில் 75% பேருக்கு குறையாமல் பட்டுவாடா செய்து முடிப்பது என்பதுதான் அ.தி. மு.க.வின் திட்டம். செல்வாக்கான வேட்பாளர்கள் ஆயிரங்களில் தருகிறார்கள். இதற்காக இரட்டை இலை வேட்பாளர் பயணிக்கும் கார் உள்பட 4 கார்கள் ஒரு தொகுதிக்குப் பயன்படுத்தப்படு கின்றன. மண்ணச்சநல்லூருக்கு 3 கோடியே 82 லட்சமும், லால்குடிக்கு 4 கோடியே 75 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் சோதனைகளை மீறி எப்படி பணம் வந்தது என அ.தி.மு.க. லோக்கல் நிர்வாகி களிடம் கேட்டபோது... ""அந்தந்த மாவட்டத்திலும் உள்ள தேர்தல் பொறுப்பு அதிகாரிகள், மீட்டிங் என்ற பெயரில் பறக்கும் படை யினரை அழைத்து ஆலோசனை நடத்துவதுபோல நேரம் கடத்துவார்கள். இந்தத் தகவல் எங்களுக்குத் தெரிவிக்கப்படும். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு  தொகுதிக்கும் பணத்தைக் கொண்டு  வந்து சேர்த்துவிட்டார்கள். திருச்சி டி.ஆர்.ஓ. கற்பகராஜ் எங்களுக்கு ரொம்ப உதவியாக இருந்தார்'' என்றனர். ""பணத்துடன் ஒவ்வொரு தொகுதிக்கும் 6,000 நோட்டுப் புத்தகங்களும் பென்சில்களும் அனுப்பப்பட்டுள்ளன. 50 வாக்காளர்களுக்கு ஒரு ஆள் என நிர்ணயித்து, பூத் கமிட்டிகள் மூலமாக பணப்பட்டுவாடா நடக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட நபர், தான் கவனிக்க வேண்டிய 50 வாக்காளர்களைக் கவனித்து அவர்களின் பெயர், செல் நம்பர், வாக்காளர் எண் ஆகியவற்றை நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொள்ள வேண்டும். பூத் கமிட்டி நபர் உண்மையாகவே பணப் பட்டுவாடா செய்கிறாரா என்பதை உறுதி செய்யும் வகையில் வார்டு அல்லது கிளைச் செயலாளர் முன்னிலையில்தான் விநியோகம் நடக்கிறது. அம்மா உத்தரவுப்படி 14-ந் தேதிக்குள் 75% வாக்காளர்களுக்கு கச்சிதமாகப் பணத்தை சேர்த்துவிடுவோம்'' என்று தெம்பாகவே சொல்கிறார்கள்'' அ.தி.மு.க.வினர்.  பணத்தைக் கொண்டு செல்ல தனியார் பள்ளி- கல்லூரி பேருந்துகளும் பயன்படுத்தப்பட்டு, கல்வி நிலையங்களிலேயே அவை பத்திரமாக வைக்கப்பட்டு பங்கு பிரிக்கப்படுகின்றன.                          திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சசிகலாவின் தாய்மாமன் மகன் அன்பழகன் வீட்டில் வருமானவரித் துறையினர் ரெய்டு, வில்லிவாக்கம், கோவை, தஞ்சை எனப் பல பகுதிகளிலும் அ.தி.மு.க. பிரமுகர்கள் வீட்டில் ரெய்டு, எதிர்க்கட்சிகள் முற்றுகை எனத் தகவல்கள் வந்தபடியே உள்ளன. ஆனாலும், "எக்காரணம் கொண்டும் பட்டுவாடாவை நிறுத்தக் கூடாது' என உத்தரவிட்டுள்ளது கார்டன்.பறக்கும் படையினர் அதிக போக்குவரத்துள்ள சாலைகளில் வரும் 4 சக்கர வாகனங்களை மட்டும் சோதனையிடுவதால், டூவீலர்களில் மஞ்சள் பையுடன் சந்து பொந்துகள் என குறுக்கு வழியில் பயணிக்கிறது வெயிட்டான அ.தி.மு.க. டீம். அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன், மத்திய அரசின் புலனாய்வு நிறுவனமான ஐ.பி. மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், அ.தி.மு.க.வை விட தி.மு.க. சற்று முன்னிலை பெற்றுள்ளதையும் இந்த இடைவெளி என்பது 1% முதல் 4% வரை இருப்பதையும் ரிப்போர்ட்டாகத் தந்திருந்தது. அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வந்த பிறகும் அது கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது. அ.தி.மு.க. + தி.மு.க. வசமுள்ள 65 வாக்குகள் போக மீதமுள்ள 35 சதவீத வாக்குகளை தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்பட 20 கட்சிகள் பிரித்துக் கொள்கின்றன. "தேர்தல் நெருங்க... நெருங்க, இந்தக் கட்சிகளுக்கான வாக்கு பலம் குறைகிற நிலையில், அவற்றை இரண்டு             பெரிய கட்சிகளில் எது பெறுகிறதோ அதற்கே வெற்றி வாய்ப்பு' என்கிறது ஐ.பி.யின் ரிப்போர்ட்.இந்த வாக்குகளைப் பெறுவதற்கு தேர்தல் அறிக்கையைவிட, பணப் பட்டுவாடாதான் பெஸ்ட் என்பதில் கார்டன் உறுதியாக உள்ளது. "பிரச்சாரம் முடிவடைகிற மே 14-ந் தேதி மாலையிலிருந்து மே 15-ந் தேதி இரவுவரை அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஒரே பணி, பண விநியோகம்தான்' எனத் தெரிவிக்கப்பட்டி ருப்பதுடன், "எந்தக் கட்சி தடுத்தாலும் கவலைப்படா மல் பணம் கொடுங்கள். தேர்தல் அதிகாரிகளைப் பற்றி யோ போலீஸ் அதிகாரிகளைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை' என உத்தரவிடப்பட்டுள்ளது.""தற்போது நடைபெறுவது போலவே அதிகாரிகள் ஒத்துழைப்புடன்தான் கடைசி நேரப் பணப் பட்டுவாடாவை முழுமையாக மேற்கொள்ள அ.தி.மு.க. மேலிடம் தீர்மானித்துள்ளது. ஐ.ஜி.தாமரைக்கண்ணன் கண்காணிப்பில், மாநில உளவு டீம் இந்த மெகா திட்டத்துக்கு ஒத்துழைக்கிறது'' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர்கள். எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து புகார்கள் வந்தால் ஆர்.டி.ஓ., டி.ஆர்.ஓ. உள்ளிட்ட வருவாய்த் துறையினர் கண்டுகொள்ளக் கூடாதென்றும், டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட போலீசாரும் புகாரைப் பதிவு செய்யக்கூடாதென்றும் சொல்லப்பட்டுள்ளதாம்."எம்.பி. தேர்தல் போல 144 தடையுத்தரவு தேவையில்லை. அதிகாரிகளைக் கொண்டே சீராக பண விநியோகத்தை முடித்துவிடுவோம்' என நம்பிக்கையுடன் சொல்கிறது ஆளுந்தரப்பு.

-தாமோதரன் பிரகாஷ், ஜெ.டி.ஆர், எஸ்.பி.சேகர்   nakkheeran,in 

கருத்துகள் இல்லை: