_18548.jpg)
_18224.jpg)
தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 20 வருடங்களுக்கும் மேலிருக்கும். அதனால் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஆன்மிக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையொட்டி பெரிய கோயிலில் வெகு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காகக் கோயிலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பிலிருந்தே பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட பணியாகக் கோயிலின் திருச்சுற்று மண்படத்தில் உள்ள ஓவியங்கள் மற்றும் சிவலிங்கத்தைப் பாதுகாக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன.
அதன் பிறகு, ஒவ்வொரு சந்நியையும் பக்தர்கள் அறியும் வண்ணம், பெயருடன் கூடிய போர்டுகள் அமைக்கப்பட்டன. கோயிலில் பூங்காவில் புல்தரைகள் அமைக்கப்பட்டன. கோயில் வளாகத்தில் தரைதளத்தில் செங்கற்கள் சிதிலமடைந்து காணப்பட்டன. இப்போது அதைச் சீரமைக்கும் வகையில் பழைய செங்கற்களை எடுத்துவிட்டு, புதிய செங்கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலைப் புனரமைப்பது மகிழ்ச்சி தரக்கூடியதுதான் என்றாலும், திருப்பணியின்போது பல கல்வெட்டுகள் சிதிலமடைந்துவிட்டது. மேலும், பல இடங்கள் சேதமடைந்துள்ளது எனக் குற்றம் சாட்டுகிறார்கள் ஆர்வலர்கள்.
இதுகுறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளரான குடவாயில் பாலசுப்ரமணியத்திடம் பேசினோம். ``பெரிய கோயிலின் உள் வளாகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள திருச்சுற்று மாளிகைப் பகுதியில் புதுப்பிக்கிறேன் எனப் புதிய தூண்களைப் பொருத்தினர். இதில் அங்கு இருந்த நான்கு கல்வெட்டுகள் தூள் தூளாக உடைந்துவிட்டன. இவை ராஜராஜ சோழனின் கல்வெட்டு பொக்கிஷம். விமான கோபுரத்தின் உள் பகுதியில் சுவர்களைச் சுரண்டி எடுத்தனர். இதற்காக சாரம் கட்டி வேலை பார்த்தனர். இதனால் கோபுர உள்பகுதி சுவர் முழுவதும் சேதமடைந்து இப்போது மழை பெய்தால் உள்ளே நீர் கசிகிறது. மேலும் கோபுரத்தின் மீது ரசாயன கலவையை நீரில் கலந்து பீய்ச்சி அடித்து கழுவுவதன் மூலம் கோபுரம் பாதிக்கப்படுகிறது.
இந்த ரசாயனக் கலவை பூசுவதன் மூலம் பார்ப்பதற்கு பளீர் என இருக்கும். ஆனால், போகப் போகக் கோபுரத்துக்கு கடுமையான பாதிப்புகள் உண்டாகும். இந்தப் பணிகளைத் தொழில்நுட்பம் வாய்ந்த வல்லுநர்களிடம் ஒப்படைத்து அவர்களின் மேற்பார்வையில் பணிகளைச் செய்து நம் பாரம்பர்யத்தைக் காக்க வேண்டும். ஆனால், பெரிய அனுபவமில்லாதவர்களிடம் கொடுத்து பணிகளைச் செய்கின்றனர். இதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது’’ என்று வேதனை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக