சனி, 12 மே, 2018

வைகோ : இந்தியா என்பது இடைக்கால ஏற்பாடுதான் ! இந்த இடைக்கால ஏற்பாடு எவ்வளவு காலம் நீடிக்கும்?

மின்னம்பலம் :இந்தியா என்பது இடைக்கால ஏற்பாடுதான் என்று குறிப்பிட்ட
வைகோ, மத்திய அரசின் அலுவலகங்கள் தமிழ்நாட்டின் அலுவலகங்களாக மாற்றப்படும் என்று பேசியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, காவிரி பாதுகாப்பு இயக்கம் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் அறப்போர் பிரச்சார வாகனப் பயணம் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரச்சார வாகனம் இன்று (மே 12) திருவாரூர் வந்தது. திருவாரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு காவிரிப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே காவிரி நதி நீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு. தமிழ்நாட்டை காங்கிரஸ், பாஜக மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை வஞ்சித்துவிட்டன” என்று குறிப்பிட்டார்.

தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்துப் பேசிய வைகோ, “உலகத்தின் மிகப் பெரிய செஞ்சேனை வைத்திருந்த சோவியத் ரஷ்யாவிலேயே 15 மாநிலங்கள் தனித்தனி நாடாகப் போய்விட்டன. நாங்கள் என்றைக்கு உங்களோடு இருந்தோம்? அக்பர் காலத்திலும் இல்லை, அசோகர் காலத்திலும் இல்லை. குப்தர்கள், மௌரியர்கள் இங்கு வந்ததில்லை. எங்கள் சோழ நாட்டுப் படைதான் கிழக்கு திசை நாடுகளை ஜெயித்தது என்று நேரு எழுதினார். இந்தியாவில் சீக்கியர்களோ, வங்காளிகளோ, மராத்தியரோ வெளிநாடுகளுக்குப் படையெடுத்துச் சென்றதில்லை. எங்கள் மூதாதையர்கள் சென்று வென்றார்கள்.
உங்களோடு ஒரு இடைக்கால ஏற்பாடுதான். தமிழ்நாடு என் தாய்நாடு. இந்தியா என்பது இடைக்கால ஏற்பாடுதான். இந்த இடைக்கால ஏற்பாடு எவ்வளவு காலம் நீடிக்கும்? எங்களைத் தொடர்ந்து வஞ்சித்துவந்தால் நாங்கள் ஏன் இந்தியாவோடு இருக்க வேண்டும்? என்ன அவசியம்? கர்நாடகக்காரன் வேறு தேசம் என்றால் ஐ.நா. சபைக்குச் செல்வோம்.
இன்றைக்கு மத்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிட வேண்டும் என்று கூறுகிறேன். நாளை மத்திய அரசின் அலுவலகங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் அலுவலகங்களாக மாறும்” என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: