ஞாயிறு, 6 மே, 2018

ஆப்கானிஸ்தானில் 7 இந்திய பொறியியலாளர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர்

tamilthehindu :ஆப்கானிஸ்தானில் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த 7 இந்திய பொறியாளர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை மீட்க அந்நாட்டு அரசும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் இன்னமும் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் உள்ளது. தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடந்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் காபூலில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில் சமீபத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்த மர்ம நபர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 57 பேர் பலியாயினர். 119 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனை சீர்குலைக்கும் நோக்கத்த்துடன் இந்த தாக்குதல் நடந்தன. இதுபோலவே துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. தீவிரவாதிகளுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் துணையுடன் உள்ளூர் ராணுவமும் பதிலடி தாக்குதல் நடந்தி வருகிறது.

தாக்குல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டில் புனரமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன. இதில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் இந்தியாவை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பாக்லான் மாகாணத்தில் பணியாற்றிவரும் சிலர் இன்று ஒரு பேருந்தில் பாக்-இ-ஷாமல் பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, துப்பாக்கியுடன் அங்கு வந்த தீவிரவாதிகள், அந்த வாகனத்தை வழிமறித்தனர்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த டிரைவர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 7 பொறியாளர்களை அவர்கள் வாகனத்துடன் கடத்திச் சென்றனர். இந்தியர்கள் கடத்தப்பட்ட தகவலை இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் மேற்கொண்டுள்ளது

கருத்துகள் இல்லை: