வியாழன், 10 மே, 2018

எஸ் வி சேகரை கைது செய்ய தடை இல்லையாம் ... ?

மின்னம்பலம்: சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தான் எனக் கூறி நடிகர் எஸ்.வி.சேகரின்
முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து அவரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர் வட்டாரங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி. சேகர் தன் முகநூலில் அவதூறாகப் பதிவிட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. அவர் அந்தப் பதிவைப் படித்துப் பார்க்காமல் ஃபார்வோர்டு செய்ததாகக் கூறி மன்னிப்புக் கேட்டிருந்தார். எனினும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பின்னர், சென்னை போலீஸ் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. இதனால் தலைமறைவான எஸ்.வி. சேகர் உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கோரினார்.

முன் ஜாமீன் கேட்டு தொடரப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த வாரம் நீதிபதி ராமதிலகம் முன்பு நடைபெற்றது. எஸ்வி.சேகர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரகுநாதன் ஆஜராகி, “வழக்கின் முக்கிய பிரிவுகள் ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம்தான். இந்த வழக்கு காரணமாக மனுதாரரின் தாயார் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் . எனவே முன் ஜாமீன் வழங்கவேண்டும்” என்றும் வாதிட்டார்.
இதற்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கம், மாதர் சங்கம், பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட 10 அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “நடிகர் எஸ்.வி.சேகருக்கு தலைமைச்செயலாளர் அடைக்கலம் கொடுத்துவருவதாகவும் அவரின் கருத்து பெண் இனத்தையே அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் காவல்துறை அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் வாதிட்டனர்.
அப்போது அரசு தரப்பில் என்ன வாதம் என நீதிபதி கேள்வி எழுப்பினார். “விசாரணை நடைபெற்று வருகிறது” என்று மழுப்பலான பதிலைக் காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரியாஸ் தெரிவித்தார்.
இன்றைய விசாரணையின் போது, “இந்த வழக்கில் மட்டும் ஏன் வேறு அணுகுமுறையைக் கையாளுகிறீர்கள் பாரபட்சமாக நடந்து கொள்கிறீர்கள் என நீதிபதி ராமதிலகம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தார். அதோடு எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, சட்டம் அனைவருக்கும் சமம் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதியின் உத்தரவையடுத்து அவரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பத்திரிகை வட்டாரங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை: