ஞாயிறு, 6 மே, 2018

அப்பா எங்கே? தந்தை இறந்தது தெரியாமல் நீட் தேர்வு மையத்தில் இருந்து வெளியே ...

அப்பா எங்கே?
மின்னம்பலம் :தந்தை இறந்தது தெரியாமல் தேர்வெழுதிய மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், தேர்வு முடிந்தபிறகு தகவல் தெரிந்து மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருந்த தந்தை கிருஷ்ணசாமியின் உடலைக் கண்டு கதறி அழுதார்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, நூலகராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளம் நாளந்தா பப்ளிக் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் எர்ணாகுளம் சென்ற கிருஷ்ணசாமியும், கஸ்தூரி மகாலிங்கமும் அங்குள்ள ஏர்லைன்ஸ் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
கஸ்தூரி மகாலிங்கம் இன்று காலை நீட் தேர்வு எழுதச் சென்ற நிலையில், விடுதி அறையில் கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிர் பிரிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியாகிய நிலையில், தந்தை மரணமடைந்தது தெரியாமல் மாணவர் தேர்வெழுதியது அப்பகுதியில் இருந்த தமிழக பெற்றோரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
தேர்வு முடிந்த நிலையில் மையத்தில் வாயிலில் செய்தியாளர்கள் அதிகமாகக் கூடியிருந்ததால் மாணவர்கள் அனைவரும் அரை மணி நேரம் தாமதமாகவே வெளியே அனுப்பப்பட்டனர். மகாலிங்கத்தை கேரள காவல்துறையினர் தங்களது வாகனத்தில் ஏற்றி கிருஷ்ணசாமி உடல் வைக்கப்பட்டிருந்த சிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக தந்தை இறந்த தகவல் மகாலிங்கத்திடம் சொல்லப்படவில்லை. அவரை அழைத்துச் செல்லும்போது வாசலில் ஊடகங்கள் புகைப்படம் எடுக்கக் குவிந்ததால் அவர்களை மிரட்சியுடன் பார்த்துச் சென்றார். வாகனத்தில் இருந்த காவல் துறை அதிகாரிகளிடம் அப்பா எங்கே? என்று மகாலிங்கம் கேட்டுள்ளார். ஆனால் அவர்களால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. அப்பாவுக்கு இரத்த கொதிப்பு அதிகமாகிவிட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து சற்று தாமதமாகவே தந்தை இறந்த செய்தி அவருக்குச் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலைக் கண்ட மாணவர் கதறி அழுதார். திருப்பூரிலிருந்து எர்ணாகுளம் விரைந்து வந்த உறவினர் அன்பரசனிடம் உடற்கூறு ஆய்வு செய்யப்படாமல் கிருஷ்ணசாமியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டிக்கு உடல் எடுத்துச்செல்லப்படுகிறது. ஆம்புலன்ஸுக்கு தமிழக எல்லை வரை கேரள காவல்துறையும், அதன்பிறகு தமிழக காவல்துறையும் பாதுகாப்பு அளிக்கும். இரவு 11மணியளவில் கிருஷ்ணசாமியின் உடல் விளக்குடிக்கு எடுத்துச்செல்லப்படும் என்று தெரிகிறது. கிருஷ்ணசாமியின் மறைவு விளக்குடி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: