ஞாயிறு, 6 மே, 2018

தமிழக வணிகர்களைக் குறிவைத்து இருமுனைத் தாக்குதல்" - மு.க.ஸ்டாலின்!

ஸ்டாலின்vikatan : ஜெ.அன்பரசன் ஶ்ரீனிவாசலுஇந்திய வணிகர் சங்க உரிமை மீட்பு மாநாடு' என்ற பெயரில், சென்னை வேலப்பன்சாவடியில் இன்று காலை வணிகர் சங்கப் பேரமைப்பின் 35-வது வணிகர்தின மாநில மாநாடு தொடங்கியது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பல்வேறு கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வணிகர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்தியக் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,  மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், ``பலமுனை வரி விதிப்பை ஒருமுனை வரி விதிப்பு முறையாக மாற்றியது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. அதேபோல ஏழை எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய 589 பொருள்களுக்கு முழு விலக்கு தந்ததும் தி.மு.க தான் என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன். 1989 ல் முதன் முதலில் வணிகர்களுக்காக நலவாரியம் அமைத்ததும் கலைஞர் ஆட்சிதான். அதுமட்டுமல்லாமல், முதல்வராக இருந்தபோதும் அந்த வாரியத்துக்குத் தலைவராக இருந்து வழிநடத்திக் காட்டியவர் கலைஞர். வணிகர் சங்கத்துக்கு 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியதுடன், உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்துக்கு ஆரம்பத்தில், 20 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளித்துவந்ததும், பின்னாளில் அந்தத் தொகையை 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். தற்போது தமிழகத்தில் இருக்கும் வணிகர்கள் மீது இருமுனைத் தாக்குதல் நடந்து வருகிறது. அதில் ஒரு முனை மத்தியில் இருக்கக்கூடிய பி.ஜே.பி ஆட்சி, இன்னொரு முனை மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சி. இந்த இரண்டு ஆட்சிகளும் வணிகர்கள் மீது தொடர்ந்து இருமுனைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதை ஏன் இந்த நேரத்தில் குறிப்பிடுகிறேன் என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது. இங்கிருக்கும் வணிகர்களால் இரண்டு தேதிகளை மறக்கவே முடியாது. ஒன்று 08-11-2016 இன்னொன்று 01-07-2017.
08-11-2016 அன்று மத்தியில் ஆளக்கூடிய மோடி தலைமையிலான மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இரவோடு இரவாக அமல்படுத்தி வணிகர்களைப் படுகுழிக்குள் தள்ளியது. அந்த நேரத்தில், வணிகர்கள் கடைகளை மூடிவிட்டு அன்றாடச் செலவுக்காக வங்கிகளின் வாசலில் காத்துக்கிடக்கும் அவலநிலை ஏற்பட்டது. அதேபோல 01-07-2017 அன்று `ஒரே நாடு ஒரே வரி' என்று சொல்லி ஜி.எஸ்.டி. முறையை மோடி அரசு அமல்படுத்தியது. இதனால் மக்களும் வணிகர்களும் எந்த அளவுக்குப் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் வணிகர்களிடம் ஆலோசனை கேட்டு செய்த ஆட்சி தி.மு.க ஆட்சிதான். வணிகர் உரிமையைப்போல் தமிழக அரசின் உரிமையையும் மீட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.
இந்திய வணிகர் சங்க உரிமை மீட்பு மாநாடு
மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் பின்வருமாறு....
இந்திய வணிகர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், தொழில் அமைப்பினை பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகள் சட்டங்களை இயற்றும்போது, வணிக அமைப்புப் பிரதிநிதிகளைக்கொண்ட குழுக்கள் அமைத்து அவசியம் கலந்தாய்வு செய்து சட்டங்கள் இயற்ற வேண்டும்.
நிரந்தர உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்ட உரிமம் அபராதம், சிறைத் தண்டனை சட்டங்களில் மாற்றம் மற்றும் சாலையோரக் கடைகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட வேண்டும். சிறு குறு வணிகர்களுக்கு இ-வே பதிவு மையங்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
புதிய தொழில் முனைவோருக்காக முத்ரா வங்கித் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வை நீக்க வேண்டும். வணிகர் குடும்பக் காப்பீட்டுத் திட்டம் குறைந்த பட்சம் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களைப் போல், ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கும் ஓய்வூதியம் அளித்திட வேண்டும். வருமான வரித்துறை உச்சவரம்பினைத் தனி நபருக்கு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்திட வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதியும், அரசுக்குப் பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டும் `கடையடைப்பு கூடாது' என்று பேரமைப்பு தீர்மானமாக முன்மொழிகிறது. பொட்டல பொருள்களுக்கு உரிமம் பெற வேண்டும் என்ற நடைமுறையைத் தவிர்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டின் மாலை நேர இருக்கையில், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கருத்துகள் இல்லை: