புதன், 9 மே, 2018

நீதி வேண்டும்: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தந்தை!

நீதி வேண்டும்: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தந்தை!மின்னம்பலம்: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை முடித்துக்கொள்வதாக சிபிஐ அறிவித்துள்ள நிலையில், மகள் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி, காவல் அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள வீட்டில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு உயர் அதிகாரிகளின் நெருக்கடிதான் காரணம் என்று சந்தேகங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மற்றும் அவரது தோழி மகேஸ்வரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இரண்டு ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டுவந்த சிபிஐ, “விஷ்ணுபிரியா கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை. விஷ்ணுபிரியாவின் மரணத்திற்கு யாரும் காரணமில்லை. எனவே, வழக்கை முடித்துக்கொள்வதாக கோவை நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. மே 9ஆம் தேதிக்குள் சிபிஐ முடிவு தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்கலாம் எனக் கோவை நீதிமன்றம் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்கு நெற்று முன் தினம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், இன்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி ஆஜராகி வழக்கை முடித்துக்கொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது மகள் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் எனத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மே 24ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்

கருத்துகள் இல்லை: