வியாழன், 10 டிசம்பர், 2020

அன்னா ஹஸாரேயால் யாருக்கு லாபம்?

 

puthiyamugam.com - ஆதனூர் சோழன் : விவசாயிகளின் போராட்டம் இந்தியா முழுவதும் பரவவேண்டும் என்று கூறியபடி, உண்ணாவிரத நாடகத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் அன்னா ஹஸாரே என்ற ஆர்எஸ்எஸ் ஸ்லீப்பர் செல். இவர் கடந்த காலத்தில் சாதித்தது என்ன? யாருக்காக இவர் ஊழல் எதிர்ப்பு நாடகத்தை நடத்தினார் என்ற பிளாஷ்பேக்கை அறிந்து கொள்வது நல்லது.    பிரதமர் உள்பட அனைவரையும் விசாரிக்கும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும், என்று ஊழல் ஒழிப்பு நாயகராக மீடியாக்களால் அடையாளப்படுத்தப்பட்டவர் அன்னா ஹஸாரே.

காங்கிரஸ் ஆட்சியின் கடைசி ஆண்டில் அந்த அரசுக்கு எதிராக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் வருவாய் இழப்பு, ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் என்று பல்வேறு பிரச்சனைகள் உருவாக்கப்பட்டன.    ஊழல் ஒழிப்புப் போராளி வேடத்துக்கு அன்னா ஹஸாரே என்பவரை தேர்வு செய்து டெல்லி ஜந்தர் மந்தரில் உட்கார வைத்தார்கள். அவருக்கு ஆதரவாக மைதானத்திலும் மேடையிலும் கட்டாயமாக அமர்ந்து தேசப்பற்றையும், ஊழல் எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் பலருக்கு இருந்தது. ஆனால், அன்னா ஹஸாரே பாஜகவுக்கு சாதகமாக கார்பரேட்டுகளால் களம் இறக்கப்பட்டவர் என்ற உண்மை அந்தச் சமயத்தில் மக்களுக்கு போய் சேரவில்லை.

காங்கிரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பங்கேற்க கார்பரேட் கம்பெனிகள் தங்கள் ஊழியர்களுக்கு முறைவைத்து விடுப்புக் கொடுத்தன. தேசியக் கொடியை குத்திக்கொண்டு திருவிழாவுக்கு போகிறவர்களைப் போல மைதானத்தில் போய் உட்கார்ந்து மீடியாக்களில் முகத்தைக் காட்டிவிட்டு வந்துகொண்டிருந்தார்கள்.

காங்கிரஸ் அரசு அன்னா ஹஸாரேவின் கோரிக்கையை ஏற்று லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது. இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்ட அன்னா ஹஸாரே, அந்த சட்டம் அமல்படு்ததப்பட்டதா? லோக்பால் அமைக்கப்பட்டதா? ஏன் அமைக்கவில்லை என்ற கவலையே இல்லாமல் சொந்த ஊருக்குப் போய்விட்டார்.

அவருடைய மேடையில் ஊழலுக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும் உதவியாக அமர்ந்த பலருடைய இன்றைய நிலையை கவனித்தால், அன்னா ஹஸாரே யார் என்பது பளிச்சென்று புரியும்.

அன்னா ஹஸாரே போராட்டத்தில் அதிகமாக பேசப்பட்டவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், கிரன் பேடி, முன்னாள் தளபதி வி.கே.சிங், பாபா ராம்தேவ் உள்ளிட்ட பலர். இவர்கள் இப்போது என்னவாக இருக்கிறார்கள்.

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிவிட்டார். கிரன் பேடி புதுச்சேரி ஆளனராகிவிட்டார். வி.கே.சிங் மத்திய அமைச்சராகிவிட்டார். பாபா ராம்தேவ் மிகப்பெரிய பிசினஸ்மேனாகி, பிரதமருக்கு வழங்கப்படும் கருப்புப்பூனை பாதுகாப்போடு வலம் வருகிறார்.

இதுதான் அன்னா ஹஸாரேயின் சாதனை. அவர் எதற்காக களம் இறக்கப்பட்டாரோ, அந்த லோக்பால் அமைப்பு மட்டும் இன்னும் அமைக்கப்படவே இல்லை.

கருத்துகள் இல்லை: