புதன், 9 டிசம்பர், 2020

நடிகை சித்ராவின் மரணம் கொலையா? தற்கொலையா? முகத்தில் 2 இடங்களில் காயம் - போலீசார் தீவிர விசாரணை

முகத்தில் 2 இடங்களில் காயம்: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் கொலையா? தற்கொலையா? - போலீசார் தீவிர விசாரணை

 .dailythanthi.com :  தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அதன் அருகில் பழஞ்சூர் பகுதியில் இருக்கும் பிரபல ஓட்டலில் சித்ரா தங்கி இருந்தார். இவரது வீடு திருவான்மியூரில் உள்ளது. தினமும் அங்கிருந்து படப்பிடிப்புக்கு சென்று வரமுடியாது என்பதால், படப்பிடிப்பு குழுவினரே இவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதன்படி தினமும் ஓட்டலில் இருந்து சென்று படப்பிடிப்பில் சித்ரா பங்கேற்று வந்தார்.


ஜனவரியில் திருமணம்

இந்தநிலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் இன்று அதிகாலை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் ஆனது. கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஹேம்நாத் என்பவரோடு வருகிற ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது.

இந்தநிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத்தும் ஓட்டலில் தங்கியிருந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா, குளிக்கப் போவதாக கூறியுள்ளார். இதற்காக ஹேம்நாத்தை அறைக்கு வெளியே இருக்குமாறு கூறி உள்ளார். இதையடுத்து ஹேம்நாத் வெளியே சென்றதும் சித்ரா அறையின் கதவை பூட்டிக்கொண்டார்.

பெற்றோர் கண்ணீர்

குளிக்க சென்ற சித்ரா நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹேம்நாத் கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் சித்ரா கதவை திறக்காததால், இதுபற்றி ஓட்டல் வரவேற் பறையில் ஹேம்நாத் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஓட்டல் ஊழியர் கணேஷ் விரைந்து வந்தார். அவர் மாற்றுச்சாவியால் அறையின் கதவை திறந்தார். அப்போது மின்விசிறியில் நைட்டி அணிந்த நிலையில், சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதைப்பார்த்து ஹேம்நாத் கடும் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து சென்று உடலை மீட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சித்ராவின் உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

முகத்தில் காயங்கள்

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளது. வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன. இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது, இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

தற்கொலை செய்த போது அறையில் சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேம்நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சித்ரா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனையில்தான் சித்ரா மரணம் அடைந்தது எப்படி? என்பது உறுதியாக தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே சித்ரா தற்கொலை வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் போலீசார் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை: