செவ்வாய், 8 டிசம்பர், 2020

100% இருக்கையுடன் பேருந்துகளை இயக்கலாம்: தமிழக அரசு!

100% இருக்கையுடன் பேருந்துகளை இயக்கலாம்: தமிழக அரசு!

minnampalam : அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நூறு சதவிகித இருக்கைகளுடன் இயக்க தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் குறிப்பாக, போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாகத் தளர்வுகள் அளித்துவந்த தமிழக அரசு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாவட்டத்துக்கு உள்ளான போக்குவரத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.    அப்போது, 50 சதவிகிதப் பயணிகளுடன்தான் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் 100 சதவிகிதப் பயணிகளை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.   இதையடுத்து, 60 சதவிகிதம் பயணிகளை ஏற்ற தமிழக அரசு அனுமதி அளித்தது. தற்போது, தொழிற்சாலைகளில் பணிக்குச் செல்லும் ஊழியர்களின் கூட்டம் பேருந்துகளில் அதிகரித்துவரும் சூழலில் கல்லூரிகளும் திறக்கப்பட்டதால் மாணவர்களின் வருகையும் அதிகரிக்கக்கூடும்.

எனவே, 100 சதவிகித இருக்கைகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என மீண்டும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தச் சூழலில் நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் தொழிற்சாலை, கல்லூரி மற்றும் பள்ளி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் 100 சதவிகித இருக்கைகளில் பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பேருந்து சேவையையும் அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

-பிரியா


 

கருத்துகள் இல்லை: