செவ்வாய், 8 டிசம்பர், 2020

பள்ளிவாசல் ஸ்பீக்கர்களில் பாங்கொலி தொழுகை பயான் ராத்தீப்பு மெளலூது .... ஸ்பீக்கர் போட்டி ஒலிமாசு.

Mohamed Bashith : · எனக்கு தெரிந்த ஒரு வழக்கறிஞருக்கே ஒரு பிரச்னைன்னு போலீஸ் ஆபிசரை பார்த்து புகார் கொடுத்திருக்கார். அதாவது அவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பள்ளிவாசலில் ஸ்பீக்கர்களின் அளவுக்கு மீறிய பயன்பாடு.. மனுசன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, சொல்லியும் பார்த்து கடைசியில் ஐஎஸ் ஏசியை போய் பார்த்திருக்கார். '' சார், ஸ்பீக்கரில் பாங்கு சொல்றது வரை பிரச்சினையில்ல, இப்ப பாங்கு மட்டுமல்ல தொழுகை மெளலூது பயான்னு எல்லாத்தையும் கூம்பு ஸ்பீக்கரில் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க, குழந்தைகள் படிக்க முடியல, உடம்பு சரியில்லாத வயசான தாய் தகப்பன் நிம்மதியா தூங்க முடியல, கொஞ்சம் நடவடிக்கை எடுங்கன்னு சொல்லிருக்கார்.. அதுக்கு போலீஸ் ஆபீசரும் '' இதுக்கு நாங்க நடவடிக்கை எடுக்க முடியாது, இதை என்கிட்ட சொல்றதுக்கு பதிலா பள்ளிவாசல் நிர்வாகத்தில் சொல்லலாம்லனு ஆலோசனை சொல்லிருக்கார். நம்ம வக்கீலும் '' அதெல்லாம் நிறைய தடவை சொல்லிட்டேன் சார், நீங்க நடவடிக்கை எடுக்க முடியாதுன்னு மறுக்கமுடியாது, ஏன்னா வழிபாட்டு தளங்களில் கூம்பு ஸ்பீக்கர் வைக்க கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் ரூலிங் இருக்குன்னு சொல்லி ஆர்டர் காப்பியை கொடுத்திருக்கார்.
அதுவரை பொறுமையா பேசிட்டு இருந்த ஆபீசர் '' ஆமாங்க ரூலிங் இருக்கு, இப்பத்தெரியுதா வெளிஏரியாவில் ஏன் பள்ளிவாசல் கட்ட விடமாட்றானு ?.. ஒன்னுக்கு பத்து ஸ்பீக்கரை போட்டு பேசிட்டே இருப்பீங்க, இந்த ஆர்டரை வெச்சிட்டு அந்த ஸ்பீக்கர்களை கழட்ட போனா போலீஸ்காரன் ஸ்பீக்கரை கழட்டவரானு என்கிட்ட சண்டைக்கு வருவாங்க, சட்டம் ஒழுங்கு பிரச்சனை தான் ஏற்படும், உங்களுக்கு தேவைன்னா எழுத்து பூர்வமாக புகார் கொடுங்க ஆக்சன் எடுக்கிறேன்னு சொல்லிருக்கார்.
ரிட்டனா கம்ப்லைன்ட் பண்ணி நாளைக்கு முனாஃபிக் முஷ்ரிக்னு பத்வா அள்ளிக் கொடுப்பாங்களோன்னு பயந்து, '' சார் எக்ஸாம் நடக்குது, படிக்க முடியல, மாணவர்களின் எதிர்காலத்தையும் நினைச்சுப் பாருங்கன்னு தன் கடைசி அஸ்திரத்தையும் விட்டுப் பார்த்திருக்கார்..
ஆபீசர் மசியல '' உங்க குழந்தைகளின் எதிர்காலத்தை பத்தி உங்களுக்கே அக்கறை இல்லாதபோது எனக்கு எப்படி வரும், புகார் கொடுத்தா நடவடிக்கை, இல்லேன்னா நோ ஆக்சன்னு சொல்லிட்டார்.
இருபது வருசத்துக்கு முன்ன பள்ளிவாசல் மினாராக்களில் கட்டியிருக்கும் ஸ்பீக்கர்களில் பாங்கொலி மட்டும் கேட்கும், இப்பவெல்லாம் பாங்கு, தொழுகை பயான் ராத்தீப்பு மெளலூது என்று அத்தனையும் லவுட் ஸ்பீக்கர்களில் சொல்லப்படுகிறது. முன்பு பள்ளிவாசல்களின் நான்கு திசைகளில் மட்டும் கட்டியிருந்த ஸ்பீக்கர்கள் இப்ப நாலு தெரு தள்ளி உயரமான கட்டிடங்களில் கூட ஸ்பீக்கள் கட்டியிருக்காங்க.. சுன்னத் ஜமாத், தவ்ஹீத்(?), தவ்ஹீதுக்குள் தூய்மையான தவ்ஹீது, கலப்படமில்லாத உயர்தர தவ்ஹீதுன்னு நிறைய கோஷ்டிகள் வந்து விட்டதால் போட்டிபோட்டு பயான்கள் வேற..
முன்னெல்லாம் மக்கள் தொகையும் குறைவு, வீடுகளும் நெருக்கமாக இருக்காது. அதனால் பாங்கு சொல்வதற்கு முன்பு நகரா என்ற முரசை அடிப்பார்கள், சில இடங்களில் சர்ச்சில் கட்டியிருக்கும் மணியை போல பள்ளிவாசல்களிலும் மணியடிக்கும் வழக்கமும் இருந்தது...
ஆனால் இன்னைக்கு மொஹல்லாக்களில் நெருக்கமான வீடுகள், தெருவுக்கு ஒரு பள்ளிவாசல் என்ற நிலை.. ஆனாலும் ஹைபவர் ஸ்பீக்கர் வெச்சு ஹைடெசிபல் குரலில் பயான் வேற.. பஜ்ரு தொழுகைக்கு பின்பு பயான், நோன்பு காலங்களில் நள்ளிரவில் பயான்னு ஒரு பக்கம் போய்ட்டே இருக்கு..
பள்ளிவாசலுக்குள் மட்டுமே இருந்த தொழுகையும் பயானும் கத்தம் ராத்தீப்பும் எப்ப தெருவுக்குள் வந்ததென்று சரியாக தெரியவில்லை, 'கூடுமா கூடாதா' 'விவாதத்துக்கு வாரியானு'' ஆரம்பித்தபோது இதுவும் ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ரெண்டு வருசத்துக்கு முன்பு பாலக்காடு ஒலவுக்கோட்டில் இதனால் ஒரு பிரச்சனை, ஒரு கட்டத்தில் ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டுவிட்டார்கள். அப்புறம் பனங்காடு ஹைதர் அலி தங்கள் தலையிட்டு '' இறைவழிபாடு என்பது மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாதவாறு இருக்கனும், பாங்கு மற்றும் அவசர அறிவிப்புகளுக்கு மட்டும் ஸ்பீக்கரை பயன்படுத்துமாறு கூறி அதை சுமூகமாக முடித்து வைத்தார்.
பாங்கு பயான் தொழுகையை போல ஸ்பீக்கர் இறைவழிபாட்டில் ஒரு அங்கம் அல்ல. இந்த ஸ்பீக்கர் போட்டி பயான்களால் ஏற்படும் ஒலிமாசுவினால் மற்றவர்களுக்கு மட்டுமல்ல மொஹல்லாக்காரர்களுக்கே பாதிப்புதான். அவனை நிறுத்தச் சொல்லு நானும் நிறுத்துறேன்னு சொன்னா இதுக்கு முடிவே இல்ல..
போலீஸ் அதிகாரியிடம் முறையிட்ட அந்த வழக்கறிஞரை சில மாதங்களுக்கு பிறகு சந்தித்த போது '' என்ன பாய் புகார் கொடுத்தீங்களான்னு கேட்டேன், புகார் கொடுத்து பிரச்சனையாகிறதுக்கு நான் வேற ஏரியாக்கு வீட்டை மாத்திட்டேன்னு சொன்னார்..

கருத்துகள் இல்லை: