சனி, 12 டிசம்பர், 2020

சித்ரா மரணத்தில் காவல்துறை சந்தேக வளையத்தில் .. பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் (அதிமுக )

 

 புதுயுகம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ‘முல்லை’ என தமிழக மக்களால் அறியப்பட்ட நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன் தினம் அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் முகத்தில் காயங்கள், நகக்கீறல்கள் இருந்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது.  சித்ரா தற்கொலை செய்துகொண்டதை காவல் துறையும், முதற்கட்ட பிரேத பரிசோதனை தகவலும் உறுதி செய்துள்ளன. சித்ராவின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளை சைபர் கிரைம் காவல் துறையினர் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

சித்ராவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் தினேஷ் என்பவரிடம் இருந்து சித்ராவுக்கு அதிகளவு அழைப்பு வந்தது தெரியவந்தது.   அதுகுறித்து விசாரித்த போது சித்ராவுக்கு அவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியது தெரியவந்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் நடந்த கடை திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சிகளை அவர்தான் ஒருங்கிணைத்துள்ளார். அந்த சமயத்தில்தான் அக்டோபர் 21ஆம் தேதி பெரம்பலூரில் பரிசுப் பொருள் கடை திறப்பு நிகழ்வில் தினேஷ் மூலமாக கலந்துகொண்டுள்ளார் சித்ரா
அதன்பிறகு சித்ராவின் வாட்ஸ் அப்பிற்கு அரசியல் பிரமுகர் ஒருவர் தொல்லை கொடுத்ததாகவும் தகவல் வெளிவந்தது.

அந்த பிரமுகரிடம் இருந்து சித்ராவுக்கு தினமும் வாட்ஸ் ஆப்பில் குட் மார்னிங், குட் நைட் உள்ளிட்ட மெசெஜ்கள் சென்றுள்ளன. வரும் புத்தாண்டை தன்னுடன் கொண்டாட வேண்டுமென அவர் வற்புறுத்தியுள்ளார்.

அதே நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வனும் கலந்துகொண்ட நிலையில், அவர்தான் அந்த மெசெஜை அனுப்பிவந்துள்ளார் என்று கூறப்பட்டது.

அதுபோலவே, இந்த புத்தாண்டை அரியலூர், பெரம்பலூர் மக்களுடன் கொண்டாட முடிவு செய்திருப்பதாகவும், எனவே தனது ரசிகர்கள் அங்கு வந்துவிடவும் என சித்ரா ஒரு வீடியோவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதனை மறுத்த தமிழ்ச்செல்வன் பாலிமர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “புதிதாக திறக்கவுள்ள கடையில் நீங்கள் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறியதால் அழைப்பிதழில் பெயர் போடச்சொன்னேன். அழைப்பிதழை பார்த்த பிறகுதான் சித்ரா அந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார் என்பதே தெரிந்தது.

தேர்தல் நேரம் என்பதால் உங்களுக்கு யாராவது தவறான தகவலை பரப்பியிருப்பார்கள். அவருடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு சரி, அவருடைய செல்போன் என் கூட வாங்கவில்லை. அதற்கான அவசியம் என்ன எனக்கு ஏற்பட்டது?” என்ற கேள்வியை முன்வைத்தார்.

எனினும் வாட்ஸ் ஆப் மெசெஜ் குறித்து அவரிடமும், சித்ராவுக்கு மெசெஜ்கள் அனுப்பிய பலரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்

கருத்துகள் இல்லை: