திங்கள், 7 டிசம்பர், 2020

அரசு மருத்துவக் கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு நிகரான கட்டண வசூல்! - மாணவர்கள் போராட்டம்!

 Government Medical College collects fees similar to private colleges - Students struggle

nakkeeran :  ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, சாலைப் போக்குவரத்து மருத்துவக் கல்லூரியின் கீழ் செயல்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான், இந்த மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

தனியார் மருத்துவக் கல்லூரியில், மாணவர்களுக்கு ரூபாய் 3 லட்சத்து 85 ஆயிரம் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வந்தது. அதேநேரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்குக் கட்டணமாக ரூபாய் 13 ஆயிரத்து 610 வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், பெருந்துறை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்ட பிறகும், தொடர்ந்து மாணவர்களிடம் தனியார் கல்லூரியில் வசூலிப்பது போல், 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. 

இந்தக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி பெற்றோர்களும், மாணவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு 7 ஆம் தேதி, மீண்டும் மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டது.

அப்போது, பெற்றோர்களுடன் கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள், திடீரென கல்லூரி வளாகத்தில் அமர்ந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் கட்டணத்தைக் கண்டித்து, பெற்றோர்களுடன் மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து பெருந்துறை டி.எஸ்.பி தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கல்லூரி நிர்வாகத்துடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தினர். தாசில்தார் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால் தொடர்ந்து கல்விக் கட்டணத்தைக் குறைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்துவோம் என மாணவர்களும், பெற்றோர்களும் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: