செவ்வாய், 8 டிசம்பர், 2020

சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு: ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி!

minnambalam :நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு: ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், தற்போது பாதிப்பு சற்று குறைந்துகொண்டே வருகிறது. கொரோனா காலத்தில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் உடற்பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தினார். அண்மையில் வெளியான போட்டோ ஷூட்டில் கட்டுமஸ்தான உடலுடன் 66 வயதிலும் இளமையுடன் காட்சி தந்தார் சரத்குமார். அவ்வப்போது சரத்குமாரின் பெயரில் முக்கிய பிரச்சினைகளுக்காக அறிக்கைகள் வந்துகொண்டிருந்தன.  நேற்று கூட தனது ட்விட்டரில், கொரோனா தொற்று குறைந்து வருவதாலும்,தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளதாலும் இன்று இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படுகிறது.மாணவர்கள் இச்சமயத்தில் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பை உறுதி செய்து,கல்லூரி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

கொரோனா குறையத் துவங்கியதால் சரத்குமார் வெப் சீரிஸ் படபிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்தார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டதால் நேற்று சென்னை திரும்ப இருந்தார். இந்த நிலையில் சரத்குமாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹைதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு பாதிப்பு உறுதியானது. அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை, சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். வரும் நாட்களில் அவரது உடல்நிலை குறித்து அடுத்தடுத்து தெரியப்படுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

சரத்குமார் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து தினந்தோறும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால் கொரோனாவால் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. அடுத்த சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழில்

கருத்துகள் இல்லை: