புதன், 9 டிசம்பர், 2020

டெல்லி விவசாயிகள் போராட்டம்: அமித் ஷா பேச்சுவார்த்தை தோல்வி... சங்கங்கள் இன்று ஆலோசனை

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! இந்திய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.) விவசாய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு ம் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே நேற்று பல மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி மாநில எல்லைப் பகுதிகளில் பல்லாயிரம் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். அமித் ஷா அழைப்பின்பேரில், நேற்று, செவ்வாய்க்கிழமை மாலை இரவு 7 மணிக்கு அமித் ஷாவுக்கும் 13 வெவ்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.

இந்த பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது. இதன்பின்பு செவ்வாய் பின்னிரவில் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண் அமைப்புகள் தலைவர்களில் ஒருவரான, அகில இந்திய கிசான் சபை எனும் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா அமித் ஷா உடனான சந்திப்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார்.

நவம்பர் 9ஆம் தேதி இந்திய அரசு மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இடையே நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

"புதிய சட்டங்கள் திருத்தம் செய்யப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க தயார் என்று அமித்ஷா எங்களிடம் தெரிவித்தார். ஆனால் எங்களுக்கு இந்த சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என்பதே கோரிக்கை," என்று அவர் தெரிவித்தார் என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை..>இந்திய அரசு எழுத்துப்பூர்வமாக தனது முன்மொழிவை அளித்த பின்பு வேளாண் அமைப்புகளின் தலைவர்கள் தங்களது அடுத்த கட்ட திட்டம் குறித்து முடிவு செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லி - ஹரியானா இடையிலான சிங்கு எல்லையில் இன்று புதன்கிழமை பகல் 12 மணி அளவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண் அமைப்புகளின் தலைவர்கள் கூடி விவாதிக்க உள்ளனர் என்றும் ஹன்னன் மொல்லா தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை: