திங்கள், 7 டிசம்பர், 2020

நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ போராட்டம்: திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு

    tamil.indian express :மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய போராட்ட எதிர்ப்புக் குழு டிசம்பர் 8  அன்று நடத்தும் ‘பாரத் பந்த்’ போராட்டத்திற்கு காங்கிரஸ்  கட்சி தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து மாவட்ட மற்றும் மாநில தலைமையகங்களிலும் போராட்டங்களை நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, பாரத் பந்த் முழு அடைப்பு போராட்டதிற்கு  தமிழக விவசாய, வணிக அமைப்புகளுக்கு திமுக, கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் “வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிச.,8-ஆம் தேதி, இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ள நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ முழு அடைப்பை வெற்றியடையச் செய்வோம்” தமிழக விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், சமூகநல அமைப்புகள், மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து, “பாரத் பந்த்”தை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று புதுதில்லியில் நடைபெற்றது. இதில், சுமூகமான முடிவுகள் எட்டப்படாததால், மீண்டும் வரும் 9ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.  

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்காக, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டுவதற்கான வாய்ப்பை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக  மத்திய அரசு வட்டாராங்கள் தி இந்தியன் நாளிதழிடம்  தெரிவித்தது. சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த மூத்த அதிகாரி ஒருவர், ” அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது, ஆனால் எந்த முடிவும் இதுவரை  எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

புதிய சட்டங்களை முழுமையாக ரத்து செய்யவேண்டும்  என்று விவசாய தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். வேளாண் பொருட்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி முறையை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, கார்ப்பரேட்டுகளுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்தனர்.

நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், போராட்டத்தில் கலந்து கொண்ட ​ முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை வீடுகளுக்கு திருப்பி அனுப்புமாறு வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும்,  நாட்டின் நலனை கருத்தில் கொண்டு விவசாயகளுடன் திறந்த மனதுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: