செவ்வாய், 8 டிசம்பர், 2020

பாரத் பந்த் 11 மாநிலங்களில் போக்குவரத்து முடக்கம்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

dailythanthi.com : புதுடெல்லி 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுடன் மத்திய அரசு அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன. 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் அனைவரும் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். ேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.

இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

‘பாரத் பந்த்’ சமயத்தில் பாதுகாப்பை கடுமையாக்கி, அமைதி பேணப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டு கொண்டு இருந்தது.

விவசாயிகளின் இந்த பாரத் பந்த்  வட மாநிலங்களில்  வெற்றிகரமாக நடந்தது.  இன்று காலை விவசாயிகள் அறிவித்தப்படி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஷ்கார் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் முழுமையாக இருந்தது. 

பெரும்பாலான மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் நாடு முழுவதும் 9, 19, 24, 44 மற்றும் 48 எண்கள் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன.  

பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தங்களது போராட்டத்தின் போது முக்கிய சாலைகளைத் தடுத்து மறியலில் ஈடுபட்டனர். 

பஞ்சாப், அரியானா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஒடிசாவில் பல இடங்களில் ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டன அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.டெல்லியில், அதிக பாதுகாப்பு இருந்தபோதிலும் எல்லைப் பகுதிகளுக்கு அருகே அதிகமான விவசாயிகள் கூடியிருந்ததால் சந்தைகள் பெரும்பாலும் திறந்தே இருந்தன. 

 ஜார்க்கண்டில்  இன்று அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன , தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகள் சில பகுதிகளில் மூடப்பட்டன, அதே நேரத்தில் உள்ளூர் போக்குவரத்து சாதாரணமாக நடந்தது.

ராஞ்சி, தன்பாத், ஹசாரிபாக், ஜாம்ஷெட்பூர், பாலமு, தும்கா, பொகாரோ, சாஹிப்கஞ்ச் மற்றும் பக்கூர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன, ஆனால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெற்றதாக தெரிவிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

அனைத்து மாவட்டங்களிலும் நிலைமை அமைதியாக இருந்ததாக  போலீஸ் டைரக்டர் ஜெனரல் எம்.வி.ராவ் தெரிவித்தார். அனைத்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் பொதுவாக ராஞ்சியில் செயல்பட்டு வந்தன.

குஜராத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இரு்ந்தது இதனால் போராட்டம் நடத்த வந்த விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டனர்.  

கோவா, இமாச்சலப் பிரதேசம், மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில், மக்களின் இயல்புவாழ்க்கைக்கு  தடை ஏதும் இல்லை.

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் அதன் தலைநகர் ராய்ப்பூர் உட்பட முக்கிய நகரங்கள் வெறிச்சோடி இருந்தன , பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு  இருந்தன, பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் கடைகளும் வணிக நிறுவனங்களும் ஓரளவு திறந்தே இருந்தன. அமைதியான முறையில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜம்மு மாவட்டத்திலோ  அல்லது மாகாணத்தின் பிற இடங்களிலோ  எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், மொத்த மண்டிகள் மூடப்பட்டிருந்தாலும் கடைகள் திறந்து இருந்தன மாநில ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தொண்டர்களிடையே ஆங்காங்கே மோதல்கள் நடந்தன.

சண்டிகர் மாநிலத்தின்  பல பகுதிகளில் சாலைகள் மற்றும் ரெயில் தடங்களில் மறியல்கள் நடந்தன பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மராட்டிய மாநிலத்தில் பந்திற்கு , ஆளும் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் ஒருங்கிணைந்து  தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன இதனால் புனே, நாசிக், நாக்பூர் மற்றும் அவுரங்காபாத் போன்ற முக்கிய நகரங்களில் மொத்த சந்தைகள் மூடப்பட்டன. சில்லறை கடைகளும்மூடப்பட்டன். போக்குவரத்து அடியோடு பாதிக்கபட்டது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாரத் பந்தால் எந்த வித பாதிப்பும் இல்லை.

விவசாயிகளின் பாரத் பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில்  பல  இடங்களில்  கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் வழக்கம் போல போக்குவரத்து இயங்கின,   கடைகள் , சந்தைகள் திறந்து இருந்தன. பாரத் பந்தால் தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. 

கருத்துகள் இல்லை: