ஞாயிறு, 17 மே, 2020

பாரம்பரியம் மரபு என்ற சொற்களில் மறைந்திருக்கும் பார்பனீயம்.. அறிவியலும், நவீனமுமே நமக்கு நல்லது.

Kalai Selvi : 'பாரம்பரியம்' 'மரபு வழி' என்ற சொற்களை பயன்படுத்தி செய்யப்படும் விளம்பரங்களை பார்க்கும்போது அச்சமாக இருக்கிறது.
'பாரம்பரிய வைத்தியம்'
'பாரம்பரிய மருந்து'
'பாரம்பரிய உணவு'
'பாரம்பரிய விளையாட்டு'
'பாரம்பரிய உடற்பயிற்சி '
'பாரம்பரிய வேளாண்மை'
'பாரம்பரிய உடை'
'பாரம்பரிய விழா'
'பாரம்பரிய இனிப்பு'
'பாரம்பரிய பொருட்கள்' இப்படி இத்தியாதி இத்தியாதி பாரம்பரிய வகைகளையெல்லாம் பார்க்கும்போது தற்போதைய 'தற்சார்போடு' தொடர்புடையது போலவே இருக்கிறது.

எனக்கு இவைகளெல்லாம்...
பாரம்பரியப்படி மக்களை முட்டாளாக்குதல், பாரம்பரியப்படி மக்களை ஏமாற்றுதல், பாரம்பரியப்படி நாட்டில் பஞ்சம் பட்டினியை ஏற்படுத்துதல், பாரம்பரியப்படி மக்களை சாகடித்தல் அல்லது கொல்லுதல் என்பது போலவே தோற்றமளிக்கிறது.
இது இப்படியே போனால், பாரம்பரியப்படி சமுகத்தை கட்டமைத்தல், பாரம்பரியப்படி நீதி பரிபாலனம் செய்தல், பாரம்பரியப்படி தண்டனை வழங்குதல், பாரம்பரியப்படி ஆண்டான் அடிமை முறையை கொண்டு வருதல்,
பாரம்பரியப்படி பெண்களை வீட்டு அடிமையாக்குதல், பாரம்பரியப்படி ஜாதி கட்டுமானங்களை உருவாக்குதல், பாரம்பரியப்படி நிர்வாகம் செய்தல், பாரம்பரியப்படி மன்னராட்சி முறையை கொண்டுவருதல், பாரம்பரியப்படி படைகளை உருவாக்குதல், பாரம்பரியப்படி ஒவ்வொரு ஜாதியில் இருக்கும் முரடர்களையும் வீரர்கள் தளபதிகள் என நியமித்தல் என்று போய் பாரம்பரியப்படி பார்ப்பனர்களிடம் அடிமையாக்கப்பட்டுவிடுமோ இந்த சமூகம் என்ற கவலை ஏற்படுகிறது.

மன்னராட்சியா இதெல்லாம் சாத்தியமா? இதெல்லாம் அதீத கற்பனை என நீங்கள் நினைக்கலாம். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, நிலம், நீர், செல்வம் எல்லாம் அவர்களின் அனுமதி இன்றி பறிக்கப்படுகிறதே இதை எதிர்பார்தீர்களா? தமிழர்களின் போராட்டங்கள் நசுக்கி ஒடுக்கப்படுகிறதே இதை எதிர்பார்த்தீர்களா? இந்தி சமஸ்கிருத திணிப்புகள் மீண்டும் நடக்கும் என நீங்கள் எதிர்பார்த்தீர்களா? தமிழக மாணவர்களுக்கு கல்வியில் இருந்த இட ஒதுக்கீடு பறிக்கப்படும் என எதிர்பார்த்தீர்களா? மற்றவர்களை விட கூடுதலாக சம்பாதித்தாலும் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா? பார்ப்பனர்கள் பலருக்கு மீண்டும் கொடுக்கு முளைத்து கொட்டுவார்கள் என எதிர்பார்த்தீர்களா? இவ்வளவும் நடக்கிறதே.
இவ்வளவும் நடக்கும்போது பழைய ஜமீன்தார்களின் மன்னர்களின் வாரிசுகள் என சிலரை தேடிக் கண்டுபிடித்து பரிவட்டம் கட்ட ஆரம்பித்து பஞ்சாயத்து பண்ண உரிமை வழங்குவது பெரிய காரியமா என்ன?
ஒரு சமூகம் அறிவு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, உடல் நலம், உள நலம், அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் உடை, அனைவருக்கும் இருப்பிடம், அனைவரும் சமம், அனைவருக்கு மகிழ்ச்சி என்ற நிலைக்கு செல்ல வேண்டுமானால் அதற்கு அறிவியல் மட்டுமே உதவ முடியும். தொடர்ந்த அறிவுத் தேடலும், அறிவு வளர்ச்சியும், மாற்றத்திற்கு தயாராக இருத்தலும், உண்மையான மக்களாட்சியும் மட்டுமே மனித உயிரினத்தை உண்மையாக காக்க முடியும்.
பாரம்பரியம், மரபுவழி என்பதெல்லாம் ஒரு சமூகத்தை முடக்கி தேக்க நிலையில் வைத்திருக்கவே உதவும்.
அறிவியலும், நவீனமுமே நமக்கு நல்லது.
- திராவிடப் புரட்சி

1 கருத்து:

dayanidhi சொன்னது…

பிரஷாந்த் கிஷோரும் தயாநிதி மாறனும் என்ன ஜாதி?