செவ்வாய், 19 மே, 2020

எம்பி ஜோதிமணியை பாஜக கரு நாகராஜன் தரக்குறைவான வார்த்தைகளால்... .. டிவி விவாதத்தில் .. வீடியோ

tamil.oneindia.com : சென்னை: டி.வி. விவாதம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் கரூர் லோக்சபா தொகுதி எம்.பி. ஜோதிமணியை பாஜக பிரமுகர் கரு நாகராஜன் இழிவாக விமர்சித்ததாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியின் கண்டனத்துக்கு பாஜக தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
டிவி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, திமுக எம்பி கலாநிதி வீராசாமி, பாஜகவின் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜோதிமணியை கரு. நாகராஜன் இழிவாக விமர்சித்தார் என்பது குற்றச்சாட்டு.
இதனால் நிகழ்ச்சியில் இருந்து ஜோதி மணி வெளியேறினார். அவருக்கு ஆதரவாக திமுக எம்பி கலாநிதி வீராசாமியும் விவாதத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினார். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மீதான இழிவான விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சஞ்சய் தத் கண்டனம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் தமது ட்விட்டர் பக்கத்தில், ஜோதிமணியை இழிவாக விமர்சித்ததை வன்மையாக கண்டிக்கிறது. பெண்களுக்கு எதிரான பாஜகவின் போக்கையே இது வெளிப்படுத்துகிறது.

இத்தகைய செயல்களுக்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இதனிடையே பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், இத்தாலிச் சோனியா இந்தியர் மோடியை இழிவாகப் பேசியதை கண்டிக்காத காங்கிரஸ் கட்சி கரு.நாகராஜனை கண்டிப்பதை ஏற்க முடியாது. We stand by Nagarajan. என பதிவிட்டுள்ளார்.

 தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, இந்த பிரச்சனை தொடர்பாக ஜோதி மணி உள்ளிட்டோர் பதிவிடும் ட்வீட்டுகளை ரீ ட்வீட் செய்து வந்தார். சஞ்சய் தத் ட்வீட்டையும் ரீ ட்வீட் செய்திருந்தார். இந்த பிரச்சனை குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜோதிமணி எம்.பி எழுதியுள்ளதாவது: புலம் பெயர்த்தொழிலாளர்களின் வேதனையை பட்டியலிட்டு அரசு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினேன். தொடர்ந்து 45 நாட்களாக களத்தில் நிவாரணப் பணியில் இருந்து மக்களின் பசியை,வறுமையை,கண்ணீரை, வேதனையை,வலியை பக்கத்தில் இருந்து பார்ப்பதால் கடந்த சில தினங்களாக மக்களின் வேதனையை ஊடகங்களின் வழியே வெளிப்படுத்தி வருகிறேன். மோடி அரசு மக்களை எப்படி இரக்கமற்று கை கழுவி விட்டது என்பதை மக்களின் குரலாக பதிவு செய்து வருகிறேன். என்னை ,நான் கூறும் கசப்பான உண்மையை எதிர்கொள்ள பாஜகவினரால் முடியவில்லை. கரு.நாகராஜன் என்னை மிகத் தரக்குறைவாக மலிவான வார்த்தைகளில் ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார்.


நான் தொடர்ந்து அந்த விவாதத்தில் பங்கேற்க விரும்பாமல் வெளியேறினேன். திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். ஊடக விவாதங்களில் பாஜக வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும் , எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடகங்களும் பாஜக வின் இந்தப் போக்கை அனுமதிக்கக் கூடாது.

பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும்,பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள். இதில் அசிங்கப்படவேண்டியது பிஜேபிதான் என்று வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பிஜேபியின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன். தமிழகமே அதிர்ந்தது #IStandwithJothimani லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ஊடகங்கள் பிஜேபியை மேலும் தோலுரித்தன. பிஜேபி பொதுவெளியில் அசிங்கப்பட்டு நின்றது. அந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது

ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. என்போன்ற பெண்கள் முறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழச்சியின் அம்சம் "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் " கொண்ட பாரதியின் கண்ட புதுமைப் பெண்ணின் வம்சம். பிரதமர் முதல் பிஜேபியின் கரு. நாகராஜன் போன்ற பிஜேபியின் மூன்றாம் தர பேச்ச்சாளர்கள் வரை எதிர்க்கட்சியினரை ,ஊடகங்களை ஒடுக்க ஆபாச அரசியலை முன்னெடுக்கலாம் . பெண்களை ஆபாசமாகப் பேசுவது,கொலை,பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுவதுமான செயல்பாடுகளை செய்பவர்களை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் பிரதமர் அவரை பின் தொடரலாம் (இது குறித்து ஸ்வாதி சதுர்வேதி விரிவாக ஒரு புத்தகமே எழுதியுள்ளார்.)

 ஆனால் நான் களத்தில் இருந்து நேர்மையோடும்,அன்போடும், கண்ணியத்துடனும் அரசியல் செய்ய வந்தவள்.ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையினைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும். அதனால் தான் எனது கரூர் தொகுதி மக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாக கொண்டாடினார்கள்.எனது வெற்றி தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தியின் வெற்றியெனெ 4,50,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான் வெற்றியை அளித்தார்கள். இந்த வெற்றி எனது வெற்றியல்ல. சாமானிய மக்களின் வெற்றி என்பதை நான் உணர்ந்துள்ளேன். பொதுவாழ்வை உண்மை,நேர்மை,அன்பின் வழியே ஒரு தவமென வாழ்கிறேன். இதை உலகறியும்.

 இம்மாதிரியான விமர்சனங்களினால் பெண்களை முடக்கிவிட முடியும் என நினைக்கும் பிஜேபி தான் முடங்கிப்போகும். இன்றைய விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை நியூஸ் 7 தமிழ் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜக வினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னோடு நிற்கும் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மன்மார்ந்த நன்றிகள்.தொடர்ந்து பயணிப்பேன். எனது மக்களோடு களத்தில் நிற்பேன் இவ்வாறு ஜோதிமணி கூறியுள்ளார்.

1 கருத்து:

விசு சொன்னது…

இந்த சனியன் கருநாகம் ஒரு நாகரீகமற்ற மனிதன். நோட்டாவைகூட மிஞ்ச முடியாத இந்த நபர் இவ்வளவு திமிராக பொதுவெளியில் ஒரு பெண் எம் பி பற்றி பேசும் போதே, நான்கு சுவருக்கு நடுவுல இவன் எப்படி பெண்களை நடத்துவான் என்று புரிகின்றது.

இவனை போல தரங்கெட்டவரைகளை பொது மேடைக்கு அழைக்காதீர்கள்.