வெள்ளி, 22 மே, 2020

ஜெயாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு அவசரச் சட்டம்

BBC :மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டை
நினைவில்லமாக மாற்றுவதற்கு அந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் நினைவு இல்லம் அமைக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவு இல்லம் அமைப்பதற்காக அந்த அமைப்பின் தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதா நிலையத்தையும், அங்குள்ள பொருட்கள், நகைகள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பராமரிக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் மற்றும் அங்குள்ள பொருட்களை அரசுடைமையாக்க வழிவகை செய்யும் வகையில் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக அந்த பொருட்கள் அரசின் வசம் இருக்கும் என்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தபின்னர், நினைவு இல்லத்தில் அவை வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதா நிலையம் இல்லம் நினைவிடமாக ஆக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: