வெள்ளி, 22 மே, 2020

ஆ ராசாவுக்கு துணை பொசெ கொடுக்காத காரணம்.... எனக்கு தலித் கோட்டாவுல இப்போதைக்கு பதவி வேணாம்!

மின்னம்பலம் : “திமுகவின் மாநில நிர்வாகிகளில் முக்கிய இடம் வகிக்கும் வி.பிதுரைசாமியை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அவரது
பதவியிடத்துக்கு மாநிலங்களவை எம்பி அந்தியூர் செல்வராஜை மே 21 ஆம் தேதி நியமித்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இந்த நடவடிக்கை கூட சற்று தாமதமாகத்தான் மேற்கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் வி.பி. துரைசாமி நேற்று அளித்த பேட்டிகள்தான் அவரது நீக்கத்துக்கு உடனடி காரணமாக அமைந்துவிட்டன. மே 18 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் முருகனை, திமுக துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைக் கழக பதவியில் இருக்கும் வி.பி. துரைசாமி நேரடியாக சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தது
பரபரப்பைக் கிளப்பியது. திமுக கரைவேட்டியோடு தன் மகன், மச்சானோடு போன வி.பி. துரைசாமியின் சந்திப்பு பற்றி பாஜகவின் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டதும்தான் திமுக தலைமைக்கே தெரியவந்திருக்கிறது.

சில மணி நேரங்களில் ஸ்டாலினுடைய உதவியாளர் தினேஷ் போன் போட்டு வி.பி. துரைசாமியிடம் பேச, ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மாதான் போனேன்’ என்று சொல்லியிருக்கிறார் துரைசாமி. இந்தத் தகவல் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டபோதே ஒரு முடிவு கட்டுவது என்று முடிவு செய்திருந்தார் ஸ்டாலின். ஆனாலும் கொஞ்சம் பொறுமை காத்தார்.
ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் தன்னோடு 40 வருட நண்பர்கள் பேசும்போது தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டியிருக்கிறார் துரைசாமி. அதாவது மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தில் தன்னோடு ஆலோசிக்காதது பற்றி கோபப்பட்டிருக்கிறார். நேரு, ஐபி மாவட்டங்கள்ல இதுபோல நடக்குமா நான் இந்த சாதிங்குறதாலதான என்னை இப்படி பண்றாங்க? என் சாதிக்காரரை பாஜக முக்கிய பதவி கொடுத்து அழகு பாத்திருக்கு, இது தப்பா? நான் அவரைப் போய் பார்த்தது தப்புன்னா எனக்கு இதுவரை செய்யப்பட்டதெல்லாம் ரைட்டா என்று கேட்டிருக்கிறார் துரைசாமி. அப்போதே நாமக்கல் திமுகவில் இருக்கும் சீனியர்கள், ‘துரைசாமி ரூட் மாறுகிறார்’ என்று தலைமைக்கு சிக்னல் கொடுத்துவிட்டனர். அப்போதும் ஸ்டாலின் அமைதியாகத்தான் இருந்தார்.
நேற்று காலையில் ஸ்டாலினை விமர்சித்து துரைசாமி பேட்டி கொடுத்ததும் தலைமையின் கோபம் அதிகமானது. ஏற்கனவே கே.பி. ராமலிங்கம் இப்படித்தான் பேசினார். அதே வழியில் இவரையும் அனுமதிப்பது தவறானது என்று ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் ஸ்டாலினிடம் பேசினார்கள். ஆனால் ஸ்டாலின், துரைசாமியை நீக்குவது என்ற முடிவைத் தாண்டி, அடுத்த துணைப் பொதுச் செயலாளர் யார் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். துரைசாமிக்கு பதிலாக திமுக கொபசெ ஆ.ராசாவுக்கு வழங்கலாம், அவரை கட்சியில் ப்ரமோட் செய்வதற்கும் இது ஏதுவாக இருக்கும் என்று நேற்று ஆலோசனை நடத்தினார். ஆனால் ஏற்கனவே துணைப் பொதுச் செயலாளர் பதவியைத் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார் ஆ.ராசா. ‘எனக்கு தலித் கோட்டாவில் பதவி அளிக்க வேண்டாம். வேண்டுமென்றால் எனக்கு மாணவர் அணியைக் கொடுங்கள். நான் கல்லூரி கல்லூரியாக போய் மாணவர்களிடம் பேசி கட்சியை வளர்க்கிறேன்’ என்று ஏற்கனவே ராசா கூறிவருவதாக தலைமைக் கழக நிர்வாகிகளே கூறுகிறார்கள்.
இந்நிலையில் வி.பி. துரைசாமியை நீக்க வேண்டும் என்று முடிவு செய்தபின் அடுத்த துணைப் பொதுச் செயலாளராக ராசாவை நியமிக்கலாம் என்று ஸ்டாலின் சொல்ல, நேற்று எ.வ. வேலு இது தொடர்பாக ஆ.ராசாவிடம் பேசியிருக்கிறார். ஆனால் ராசாவோ, ‘எனக்கு தலித் கோட்டாவுல இப்போதைக்கு பதவி வேணாம்’ என்று முன்பு சொன்னதையே சொல்லியிருக்கிறார். இதையடுத்துதான் உடனடியாக அந்தியூர் செல்வராஜையே அடுத்த துணைப் பொதுச் செயலாளராக நியமித்து அறிவிப்பு வெளியானது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: