வெள்ளி, 22 மே, 2020

அன்றும் இன்றும் நமக்கு நாமே .. பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்


மின்னம்பலம் : ஊரடங்கு மற்றும் அதனால் நெருக்கடியை சந்தித்துள்ள பொருளாதார சூழல்கள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று (மே 21) 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்க திட்டம் குறித்து வெளியே தெரியாத பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
ஜெயரஞ்சன் உரையாற்றும்போது, “அரசின் வரி வருவாயிலிருந்து செலவு செய்வது அல்லது வரிவிலக்கு செய்வதுதான் இயல்பு ஊக்கத் திட்டம் ஆகும். ஆனால், 20 லட்சம் கோடி பொருளாதார திட்டம் என்பது முழுவதும் அரசு கஜானாவிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்யும் திட்டம் கிடையாது. வெறும் 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே அரசுப் பணத்திலிருந்து செலவிடப்படுகிறது. மீதமுள்ள பெரும்பாலான நிதி ரிசர்வ் வங்கி தனது பணக் கொள்கையில் அறிவித்திருக்கக் கூடியவை. இதன் மூலம் அரசின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துவிடுவோம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.

இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவானவர்கள் உள்பட பல்வேறு தரப்பட்ட பொருளாதார நிபுணர்கள் சொல்வது, மக்கள் கைகளில் பணம் சென்று சேர்ந்தால்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என வலியுறுத்துவதாகக் குறிப்பிடும் ஜெயரஞ்சன்,
“இவையெல்லாம் சரியில்லை என பிரதமர் நரேந்திர மோடி வேறொரு முடிவை எடுத்துள்ளார். மானியமாக இருந்தாலும் உணவாக இருந்தாலும் கொஞ்சமாக கொடுப்போம். மீதமுள்ளவற்றை மக்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த முடிவாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
“நமக்கு நாமே என்பதுதான் அதன் சாரம்சம். மக்களுக்கான உரிமைகளை அளிக்காமல் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறார்களாம். எப்படியென்றால் நாங்கள் கடன் தருகிறோம், அதனை வாங்கி தொழிலை மீட்டெடுங்கள். அதன் வழியாக இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்போம் என்று சொல்கிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் கேட்டது அதற்கு ஒரு சிறந்த உதாரணம்” என்றும் சொல்கிறார் ஜெயரஞ்சன்.
முழு காணொலியையும் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

கருத்துகள் இல்லை: