வியாழன், 21 மே, 2020

மதமும் அரசியலும் ஒருவரை முற்றிலுமாக சிந்திக்க விடாது

Dhinakaran Chelliah : ஒரு நண்பர் தொலை பேசியில் கூறினார் இந்த வட
மாநிலத்தவர்கள் கொழுப்பெடுத்துப் போய் தங்களது ஊர் நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று.
இன்னொருவர் சொன்னார் இந்திய ஊடகங்கள் அனைத்தும் வட மாநில தொழிலாளர்கள் பற்றித் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று.
மற்றொருவர் எழுதியிருந்தார் முன்னாள் BJP மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போன்றவர்கள் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆளும் அரசை எதிர்ப்பதுதான் அவர் போன்றவர்களின் வேலை என்று.
வடமாநிலத் தொழிலாளர் ஒருவர் ரோட்டில் நடந்து கொண்டே “மோடிஜி எங்களைப் பற்றி கவலை வேண்டாம், இது வரை 700 கி.மீ நடந்திருக்கிறோம், இன்னும் எத்தனை கி.மீ நடந்தாலும் எங்களைப் பற்றி கவலை வேண்டாம், நீங்கள் நாட்டை மட்டும் பாதுகாத்தால் போதும்” என்று கூறிய வீடியோவை பதிவு செய்திருந்தார்.

இன்னொருவர் கேட்டிருந்தார், வடமாநில மக்கள் பற்றி இவ்வளவு வருத்தப்படுறீங்களே, நீங்க ஏன், நல்ல யோசனை வழங்கக் கூடாது என்று!
‘வெளிநாட்டில் இருந்து கொண்டு ஏன் எழுதனும், ஊருக்கு வந்து களத்துல இறங்கி உதவ வேண்டியதுதானே?’ என மற்றொருவர் எழுதியிருந்தார்.
ஆளும் கட்சியை ஆதரிக்கும் ஒருவர் கூட இந்தத் தொழிலாளர்கள் மீது இரக்கப் பட்டோ, அரசாங்க நடவடிக்கை போதுமானதாக இல்லை என மனம் திறந்து சொல்வதைக் காண இயலவில்லை.
மனிதாபிமானம் அவர்களுக்கு துளியும் இல்லையா, அல்லது என்னைப் போன்ற ஆட்கள் வீணாக கவலைப்பட்டு மனிதம் மனிதநேயம் என உளறிக் கொண்டிருக்கிறோமா?! தெரியவில்லை, அவர்களைப் போல் சிந்திக்கும் திறன் அற்றுப் போய்விடுவோமா என்றும் விளங்கவில்லை.
மனசாட்சியே இல்லாதவர்களிடம்தான் இத்தனை ஆண்டுகளாக பழகி வருகிறோமா என்று ஆழ்ந்த கவலையும் வருகிறது. மதமும் அரசியலும் ஒருவரை முற்றிலுமாக சிந்திக்க விடாது என்பதை மறுபடி மறுபடி உணர்கிறேன்!
என்ன தவறு செய்தாலும், கொலையே பண்ணினாலும், செய்தது நம்ம ஆளுடா என்ற ஆணவத்துடன் இருப்பவர்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பது கடைசி வரை விளங்கவே இல்லை

கருத்துகள் இல்லை: