tamil.oneindia.com - Vigneshkumar : என்டிஏ ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் ரத்து? மோடி சொன்ன வார்த்தை
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது மகளிர் இலவசமாகப் பேருந்துகளில் பயணிக்க விடியல் பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடி பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணத்திற்கு எதிராகப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் அதிமுக- பாஜக வென்றால் விடியல் பயணம் நிறுத்தப்படும் என்றும் தகவல் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் சூழலில் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எப்போதுமே வாக்குறுதிகளும், தேர்தல் அறிக்கைகளும் தான் முக்கியத்துவம் பெறும். அதில் திமுக கூட்டணியும் சரி, அதிமுக கூட்டணியும் சரி, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பார்கள்.
Narendra Modi on Women Free Bus Travel
கடந்த 2021 திமுக அதுபோல பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்தது. அதில் பெரும் வரவேற்பைப் பெற்றது மாதம் தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.1000 உரிமைத் தொகை. அதேபோல மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கும் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் ஸ்டாலின் விடியல் பயணத் திட்டத்தை அறிவித்தார்.
இந்த விடியல் பயணத் திட்டத்தின் கீழ் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக அமைக்கலாம். திமுக ஆட்சிக்கு வந்தது முதலே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகப் பெரியளவில் உதவுகிறது. இதனால் பெண்களிடையே இத்திட்டத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
விடியல் பயணம் நிறுத்தப்படும்
இதற்கிடையே அதிமுக- பாஜக ஆட்சிக்கு வந்தால் விடியல் பயணம் நிறுத்தப்படலாம் என திமுக ஆதரவு நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அதற்கு ஆதாரமாக மோடியின் நேர்காணல் ஒன்றைக் காட்டுகிறார்கள். 2024 லோக்சபா தேர்தல் சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய டுடே ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருந்தார்.
அதில் தேர்தலைக் காரணமாக வைத்து, பல அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் என்ற திட்டத்தை அறிவிப்பதாகவும் இதுபோன்ற திட்டங்களால் நகரின் மெட்ரோ திட்டங்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற திட்டங்களால் நாடு எப்படி முன்னேறும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி
அந்த நேர்காணலில் பிரதமர் மோடி மேலும், "நீங்கள் ஒரு நகரத்தில் மெட்ரோ திட்டத்தை அமைக்கிறீர்கள். தேர்தல் நேரம் வந்தவுடன் பெண்களுக்கு இலவச பஸ் பயணங்களை வாக்குகளாக அளிக்கிறீர்கள். அதாவது உங்கள் மெட்ரோ பயணிகளில் கிட்டத்தட்ட 50% பயணிகளை நீங்களே காலி செய்கிறீர்கள். இது போன்ற திட்டங்களால் நீண்ட கால நோக்கில் மெட்ரோ திட்டத்திற்கு நிதியளிக்க முடியாமல் போகிறது. இதுவே நாம் எதிர்கொள்ளும் பிரச்சனை.
நாடு எப்படி முன்னேறும்
இந்த விவகாரத்தில் நான் அரசியல் விரும்பவில்லை. அது என் நோக்கமும் இல்லை. நான் நேராக எனது கருத்துக்கு வருகிறேன். இந்தக் குழப்பத்தால் நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்.. சுற்றுச்சூழல் கூட பாதிக்கப்பட்டுள்ளது.. நாம் முட்டாள்களாக மாறுவோம். இப்படி இருந்தால் எப்படி மெட்ரோ திட்டங்கள் வரும்? நாடு எப்படி முன்னேறும்?" என்றார்.
இந்த நேர்காணலை வைத்தே அதிமுக- பாஜக ஆட்சி வந்தவுடன் விடியல் பயணம் நிறுத்தப்படும் என்ற தகவலை திமுக ஆதரவாளர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதேநேரம் இந்த வீடியோ தொடர்பாக அல்லது விடியல் பயணம் தொடர்பாக அதிமுக- பாஜக கட்சிகள் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக