செவ்வாய், 19 மே, 2020

கரு. நாகராஜன் வந்தால் பெண்கள் வரமாட்டோம்: விவாதத்தில் ஆபாசம்!

பாஜக பங்கேற்கும் எந்த நியூஸ் 7 தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் திமுக பங்கேற்காது - .ஸ்டாலின் .

 கரு. நாகராஜன் வந்தால் பெண்கள்  வரமாட்டோம்:  விவாதத்தில் ஆபாசம்!மின்னம்பலம் : தமிழக செய்தித் தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களில் பெண்களுக்கு எதிரான ஆபாசத் தாக்குதல்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேற்று (மே 18) நடந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம், பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன் கடுமையாக தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டார். இதையடுத்து விவாதத்தில் இருந்து வெளியேறினார் ஜோதிமணி.

இதுகுறித்து ஜோதிமணி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ( 18/05/2020 ) நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம் விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன். புலம் பெயர்த்தொழிலாளர்களின் வேதனையை பட்டியலிட்டு அரசு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினேன். தொடர்ந்து 45 நாட்களாக களத்தில் நிவாரணப் பணியில் இருந்து மக்களின் பசியை,வறுமையை,கண்ணீரை, வேதனையை,வலியை பக்கத்தில் இருந்து பார்ப்பதால் கடந்த சில தினங்களாக மக்களின் வேதனையை ஊடகங்களின் வழியே வெளிப்படுத்தி வருகிறேன்.
மோடி அரசு மக்களை எப்படி இரக்கமற்று கை கழுவி விட்டது என்பதை மக்களின் குரலாக பதிவு செய்து வருகிறேன். என்னை ,நான் கூறும் கசப்பான உண்மையை எதிர்கொள்ள பாஜகவினரால் முடியவில்லை. கரு.நாகராஜன் என்னை மிகத் தரக்குறைவாக மலிவான வார்த்தைகளில் ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார். நான் தொடர்ந்து அந்த விவாதத்தில் பங்கேற்க விரும்பாமல் எனது கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு வெளியேறினேன். திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
ஊடக விவாதங்களில் பாஜக வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும் , எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடகங்களும் பாஜக வின் இந்தப் போக்கை அனுமதிக்கக் கூடாது.
பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும்,பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள். இதில் அசிங்கப்படவேண்டியது பிஜேபிதான் என்று வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பிஜேபியின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன். தமிழகமே அதிர்ந்தது #IStandwithJothimani லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ஊடகங்கள் பிஜேபியை மேலும் தோலுரித்தன. பிஜேபி பொதுவெளியில் அசிங்கப்பட்டு நின்றது. அந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.
ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. என்போன்ற பெண்கள் முறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழச்சியின் அம்சம்
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் " கொண்ட பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் வம்சம்.
பிரதமர் முதல் பிஜேபியின் கரு. நாகராஜன் போன்ற பிஜேபியின் மூன்றாம் தர பேச்சாளர்கள் வரை எதிர்க்கட்சியினரை ,ஊடகங்களை ஒடுக்க ஆபாச அரசியலை முன்னெடுக்கலாம் . பெண்களை ஆபாசமாகப் பேசுவது,கொலை,பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுவதுமான செயல்பாடுகளை செய்பவர்களை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் பிரதமர் அவரை பின் தொடரலாம் (இது குறித்து பத்திரிக்கையாளர் ஸ்வாதி சதுர்வேதி விரிவாக ஒரு புத்தகமே- I am A Troll) எழுதியுள்ளார். ) ஆனால் நான் களத்தில் இருந்து நேர்மையோடும்,அன்போடும், கண்ணியத்துடனும் அரசியல் செய்ய வந்தவள்.ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையினைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும். அதனால் தான் எனது கரூர் தொகுதி மக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாக கொண்டாடினார்கள்.எனது வெற்றி தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தியின் வெற்றியெனெ 4,20,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை அளித்தார்கள். இந்த வெற்றி எனது வெற்றியல்ல. சாமானிய மக்களின் வெற்றி என்பதை நான் உணர்ந்துள்ளேன். பொதுவாழ்வை உண்மை,நேர்மை,அன்பின் வழியே ஒரு தவமென வாழ்கிறேன். இதை உலகறியும்.
இம்மாதிரியான விமர்சனங்களினால் பெண்களை முடக்கிவிட முடியும் என நினைக்கும் பிஜேபி தான் முடங்கிப்போகும்.
இன்றைய விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை நியூஸ் 7 தமிழ் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜக வினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் என்னோடு நிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும்,அன்புச் சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து பயணிப்பேன். எனது மக்களோடு களத்தில் நிற்பேன்” என்று கூறியுள்ளார்.
திமுக மகளிரணிச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி, “தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன்” என்று சாடியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாதர் சங்க முக்கியத் தலைவருமான திண்டுக்கல் பாலபாரதி, “
இனி கரு நாகராசன் கலந்துகொள்ளும் டிவி விவாதங்களில் பெண்கள் சார்பாக யாரும் பங்கெடுக்கமாட்டோம் என்பதை ஊடக உரிமையாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “பாஜகவின் சித்தாந்தம் பெண்மைக்கு எதிரானது. பொதுவெளியில், இந்த 21ம் நூற்றாண்டில் ,பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களை இழிவாகப் பேசுகிற பாரதிய ஜனதா நண்பர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ் சமூகம் அவர்களுக்கு நல்ல பாடத்தைப் புகட்டும் என தமிழக காங்கிரஸ் மிகக் கடுமையாக தெரிவித்துக்கொள்கிறது” என்று கூறியுள்ளார்.
பாஜகவினரோ, “குறிப்பிட்ட அந்த விவாதத்தில் மோடியை கல்லால் அடிக்கும் அளவுக்கு மக்கள் கோபத்தில் இருப்பதாகக் கூறினார் ஜோதிமணி. இது எப்படி சரியாகும்? இது வன்முறையைத் தூண்டிவிடுவது போல பேசக் கூடாது என்று விவாத நெறியாளரே கூறினார். அதற்கு எதிர்வினையாக கரு நாகராஜன் பேசப் போய்தான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்” என்கிறார்கள்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: