செவ்வாய், 19 மே, 2020

காத்திருக்கும் சவால்.. பொருளாதார பாதிப்பு கொரோனாவை விட மோசமாக இருக்கும்.

தினகரன் :கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, நான்காவது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. தொடரும் ஊரடங்குகளால்
வேலையின்மை, வாழ்வாதாரம் பாதிப்பு, வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கியுள்ளன. கொரோனா வைரசை 
கட்டுப்படுத்துவதுடன், மேற்கண்ட சவால்களையும் மத்திய, மாநில அரசுகள் எப்படி கையாளப்போகின்றன என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தங்கியிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களின் சொந்த மாநிலங்களுக்கு கடும் இன்னல்களை கடந்து செல்கின்றனர். இதனால், நாட்டின் பல மாநிலங்களிலும் கட்டுமான தொழில் உள்பட பல தொழில்கள் கடும்  பாதிப்பை சந்திக்கும். ஊர் திரும்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு, இனி சம்பந்தப்பட்ட மாநிலங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்ட  வேண்டும்.

ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடும் நிலையில், புதிதாக இவர்களுக்கும் வேலை கிடைப்பது ‘குதிரைக்கொம்பாக’ இருக்கும். இது ஒருபுறமிருக்க, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலையிழந்த பல பேர் இந்தியா திரும்புகின்றனர்.

இவர்கள் இனி இந்தியாவில் வேலைவாய்ப்பு தேடுவர். வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டால், வன்முறை மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகளவில் தலைதூக்க ஆரம்பித்து விடும். வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், புதிய முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது நல்ல விஷயம் தான். அதேசமயம், கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் விவசாயிகள் மற்றும் சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும். தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்தாலும் முழு பயன்பாட்டிற்கு வர சில மாதங்களாகலாம்.

மேலும், குறைந்த அளவே பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்பதால், பலர் வேலையிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் மக்களின் நலன் கருதி, ஆதார் மூலம் மக்களுக்கு நிவாரண உதவித் தொகை கூடுதலாக வழங்கலாம். உணவுக்காக சிறுவர்களும், பெரியவர்களும் கையேந்தி நிற்கும் அவல நிலையை பார்க்கும்போது, பொருளாதார வளர்ச்சியில் இன்னும் எவ்வளவு தூரம் நாம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை அழுத்தமாக உணர முடிகிறது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முதலில் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வேலை இழந்தவர்களுக்கும், வேலைவாய்ப்பை தேடுபவர்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகளை உடனே உருவாக்க வேண்டும். முக்கியமாக, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியை உடனே எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் துரிதமாக செயல்படாவிட்டால் பொருளாதார பாதிப்பால் ஏற்படும் விளைவுகள் கொரோனாவை விட மிக மோசமாக இருக்கும். சுதாரித்துக்கொண்டு புதிய வழிகளை பின்பற்றி சாதுர்யமாக செயல்பட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

கருத்துகள் இல்லை: