tamil.oneindia.com : ஸ்டாலினால் புலம்பும் கூட்டணி கட்சிகள்.. மாப்பிள்ளை அவரு தான்.. ஆனால் சட்டை என்னுடையது! பின்னணி
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக உள்பட சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை தனிசின்னத்தில் நிறுத்தாமல் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்த திமுக தலைமை தயாராகி வருகிறது. இது கூட்டணி கட்சிகளை சிக்கலை ஏற்படுத்த உள்ளது. அதாவது திமுகவின் இந்த முடிவால் அந்த கட்சிகளின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்படலாம் என்றால் கூட்டணி கட்சியினர் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. திமுக தனது கூட்டணியை தொடர்ந்து பலமாக்கி வருகிறது. அந்த வகையில் புதிதாக தேமுதிக கூட்டணியில் இணைந்துள்ளது. மேலும் விரைவில் ஓ பன்னீர் செல்வமும் திமுக கூட்டணியில் ஐக்கியமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தவிர பாமக நிறுவனர் ராமதாஸ் அணியையும் கூட்டணிக்குள் கொண்டு வர திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என்று நான்கு முனை போட்டி உள்ளது. இதனால் ஓட்டுகள் சிதறும். மேலும் 5 ஆண்டு ஆட்சியில் இருந்ததால் ஒரு தரப்பு மக்களிடம் ஆட்சி மீதான எதிர்ப்பு அலை இருக்கும். இதனால் திமுக தனது கூட்டணியை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் திமுக தலைமையால் கூட்டணி கட்சிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த 2021 சட்டசபை தொகுதிகளில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டது. மற்ற தொகுதிகளைகூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. இதில் வைகோவின் மதிமுக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், திருமாவளவனின் விசிகவிற்கு தலா 6 இடங்கள் வழங்கப்பட்டன.
இதுதவிர ஈஸ்வரனின் கொங்குநாடுமக்கள் தேசிய கட்சிக்கு 3, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கதிரவனின் அனைத்திந்திய பார்வர்ட் பிளாககிற, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, முருகவேல் ராஜனின் மக்கள் விடுதலை கட்சிக்கு, அதியமானின் ஆதித்தமிழர் பேரவைக்கு தலா ஒன்றும் வழங்கப்பட்டது. இதுதவிர காதர் மொஹிதினின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா 3 இடங்கள் வழங்கப்பட்டது.
இதில் 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தங்களது கட்சி சின்னத்தில் களமிறங்கின. மற்றபடி வைகோவின் மதிமுக, ஈஸ்வரனின் கொங்குநாடுமக்கள் தேசிய கட்சி, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி , கதிரவனின் அனைத்திந்திய பார்வர்ட் பிளாக்கிற்கு, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, முருகவேல் ராஜனின் மக்கள் விடுதலை கட்சிக்கு, அதியமானின் ஆதித்தமிழர் பேரவைக்கு கட்சிகள் 15 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. இதில் 8 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இந்த கட்சிகளுடன் கடந்த முறை 3 தொகுதிகளில் திமுக கூட்டணியில் ஏணி சின்னத்தில் காதர் மொஹிதினின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அனைத்து இடங்களில் தோற்றது. இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் நிற்க நிர்பந்தம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், திமுக கூட்டணியில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, தனியரசுவின் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிமுன் அன்சாரியின் மனிதநேயஜனநாயக கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. இந்த கட்சிகளும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றன.
இதனால் இந்த கட்சிகளையும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கினாலும் கூட அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால் வென்றால் திமுக எம்எல்ஏக்கள் என்ற கணக்கில் தான் வருவார்கள் என கணக்கு போட்டுள்ளது திமுக தலைமை.
இதுபற்றி திமுகவின் மூத்த தலைவர் கூறுகையில், "திமுகவின் சின்னத்தில் முன்னர் போட்டியிட்ட கூட்டணி கட்சிகள் மீண்டும் அதே சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்படும்" என்றார். இதனால் கூட்டணி கட்சியினர் புலம்ப தொடங்கி உள்ளனர்.
ஏனென்றால் பொதுவாக ஒரு கட்சி தனது சொந்த சின்னத்தில் நின்று பெறும் வாக்குகளை பொறுத்து தான் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும். ஆனால் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு பிற கட்சிகளின் சின்னத்தில் நின்றால் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு கிடையாது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டு வரும் ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவற்றை கடந்த செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையம் பதிவு பட்டியலில் இருந்து நீக்கியது.
பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் ஜவாஹிருல்லாவின் கட்சியும் திருச்செங்கோடு ஈஸ்வரனும் வெற்றி பெற்றிருந்தாலும் கூட அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இருந்ததால் தேர்தல் ஆணையம் பட்டியலில் இருந்து நீக்கியது. இப்போது மீண்டும் திமுக தனது கூட்டணிகட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் களமிறக்க திட்டமிட்டுள்ளதால் அந்த கட்சிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக