திங்கள், 2 மார்ச், 2020

ராஜீவ் நினைவிடத்தில்: நாம் தமிழர் துரைமுருகன் கேவலமான டிக்டாக்


மின்னம்பலம் : ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக் டாக் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகி துரைமுருகன் சமீபத்தில் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரிலுள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்குச் சென்றுள்ளார். அங்கு ராஜீவ் காந்தி நினைவுத் தூண் அருகே டிக் டாக்கில் வசனம் பேசி வீடியோ எடுத்தார். அதில், “நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள். இனிமேல் எந்த நாட்டின் அதிபராவது எம் இனத்தின் மீது கைவைத்தால் அவர்களுக்குத் தூக்குதான்” என்று அருகிலிருந்த ராஜீவ் காந்தி நினைவுத் தூணை காட்டினார்.

இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. மறைந்த ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அவதூறாகவும் இழிவாகவும் முகநூலில் டிக்டாக்கில் பேசிய துரைமுருகனை உடனடியாக கைது செய்ய கோரி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் ஆய்வாளரிடம் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரூபி ஆர் மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “சீமான் கட்சியை சேர்ந்த ஒருவர், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்திற்கு மிக அருகில் நின்றுகொண்டு அதை கைநீட்டிக் காட்டி “தமிழினத்தை படுகொலை செய்தால் என்ன கதி ஏற்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்று பேசி, வீடியோவில் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தகைய கொடூரமான, சட்டவிரோத பேச்சு தொடருவதற்கு சீமான் தான் காரணம். அன்றே அவர் கைது செய்யப்பட்டிருந்தால் இந்நிலை தொடர்ந்திருக்காது. எனவே, இதை உடனடியாக தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் இதற்கு எதிர்வினையாக காங்கிரஸ் கட்சியினரும் செயல்பட நேரிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: