ஞாயிறு, 1 மார்ச், 2020

இம்ரான்கானும், ஸ்டாலினும் அண்ணன் தம்பியா? : முரளிதர் ராவ்

இம்ரான்கானும், ஸ்டாலினும் அண்ணன் தம்பியா? : முரளிதர் ராவ்  மின்னம்பலம் : குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், பாஜக சார்பில் கடந்த 28 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களை நோக்கி குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவுப் பேரணி நடந்தது. அந்தப் பேரணி கன்னியாகுமரியில் இன்று மாலை (மார்ச் 1) நடந்தது.
குமரியில் எப்போதுமே பாஜக பலமான சக்தியாக இருக்கும் நிலையில் இந்த பேரணியிலும் அது வெளிப்பட்டது. இப்பேரணியில் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதர் ராவின் பேச்சில், ‘பாகிஸ்தான், ஸ்டாலின்’ என்ற வார்த்தைகளே பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்தன.
பாஜகவின் மாவட்டத் தலைவர் தர்மராஜ், “இனிமேல் குமரி மாவட்டத்தில் யாரும் சிஏஏவுக்கு எதிராக போராடக் கூடாது. அப்படி போராடினால் அங்கேயே நாங்களும் ஆதரவாகப் போராடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஸ்டாலின் பிறந்தநாள் காணும் இதே மார்ச் 1 இல்தான் பொன். ராதாகிருஷ்ணனும் பிறந்தநாள் காண்கிறார். அவர் தன் பேச்சில் சிஏஏ குறித்து விளக்கினார்.

இந்த பேரணியில் பேசிய முரளிதர் ராவின் பேச்சில் பாகிஸ்தானும், ஸ்டாலினும்தான் அதிகமாக குறிப்பிடப்பட்ட வார்த்தைகளாக இருந்தன.
“ஸ்டாலின் பொது அறிவு நூல்களைப் படிக்க வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு என்னென்ன துன்புறுத்தல்கள் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும், இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை என்ன என்பதையும் ஒப்பிட்டு ஸ்டாலின் புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
சுதந்திரம் அடைந்த போது இந்தியாவில் இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இங்கே எவ்வளவு அதிகரித்திருக்கிறது. அதேநேரம், பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதையெல்லாம் ஸ்டாலின் அறிந்துகொள்ள வேண்டும். ஸ்டாலினும்,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அண்ணன் தம்பி போல பேசுகிறார்கள். ஸடாலினால் இனி தமிழ்நாட்டில் முதல்வராக வர முடியாது. வேண்டுமென்றால் பாகிஸ்தான் போகட்டும்” என்று பேசினார் முரளிதர் ராவ்.
வேந்தன்

கருத்துகள் இல்லை: