செவ்வாய், 3 மார்ச், 2020

சிஏஏ: ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வழக்கு!

சிஏஏ: ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வழக்கு!மின்னம்பலம் : சிஏஏ விவகாரம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா ஆகிய மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
இதனிடையே சிஏஏவை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஆர்ஜெடி மூத்த தலைவர் மனோஜ் ஷா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா, மக்களவை உறுப்பினர் அசாதூதின் ஓவைசி, சிபிஐ, எஸ்எஃப்ஐ உள்ளிட்ட 140 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் இருந்துவருகிறது.
இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறது. மனுவில், குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவ எங்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறும் கோரப்படவுள்ளது. இந்த மனு குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நேற்று இந்தியாவுக்கு தகவல் தெரிவித்திருந்ததாக வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இதுதொடர்பாக கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில், வெளிநாட்டு அமைப்பின் தலையீட்டை ஏற்க முடியாது. குடியுரிமை தொடர்பான சட்டங்கள் இயற்றுவதற்கு இந்திய நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பாடுகள் இல்லாத முழு உரிமை உள்ளது” என்றார்.
எழில்

கருத்துகள் இல்லை: