வியாழன், 5 மார்ச், 2020

கனிமொழி நாடாளுமன்றத்தில் : `கொரோனா வைரஸ் தடுக்க தெர்மல் சோதனை; வைராலஜி ஆய்வு மையம்’ - கோரிக்கை

கனிமொழிவிகடன் : இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு இன்னும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார் தி.மு.க எம்.பி கனிமொழி. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மக்களவையில் பேசினார். இதன் பின் பேசிய தி.மு.க மக்களவைக் குழு துணைத் தலைவர் கனிமொழி, “மத்திய அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில், கடந்த ஜனவரி மாதமே கொரோனா குறித்த எச்சரிக்கை விடப்பட்டது என்றும் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக அவரைப் பாராட்டுகிறோம்.
அதேநேரம் மத்திய அமைச்சர் தன் உரையில் இந்தியாவிலேயே புனேயில் இருக்கும் தேசிய வைராலஜி ஆய்வு நிலையம் ஒன்று மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்டார். இது போதாது. ஏனென்றால் கொரோனா என்பது உலக அளவிலான அச்சுறுத்தலாக உள்ளது. இதை எதிர்கொள்ள இதுகுறித்து ஆராய்ச்சிகள் செய்ய நாட்டில் மண்டலத்துக்கு ஒரு வைராலஜி ஆய்வு நிலையமாவது அமைக்கப்பட வேண்டும்.

அதேபோல விமான நிலையங்களில் கொரோனா தாக்கம் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுபவர்களை நகர்ப்புறத்துக்குள் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறார்கள். சார்ஸ் வைரஸை விட இதன் பரவும் வேகம் அதிகம் என்கிற நிலையில், விமான நிலையங்களுக்கு அருகிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறியும் தெர்மல் சோதனை நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் இன்னும் செய்யப்படவில்லை என்று அறிகிறேன். வெளிநாட்டிலிருந்து வருகிறவர்களை வரவேற்க நான் விமான நிலையம் சென்றிருந்தேன். அவர்களுக்கு தெர்மல் ஸ்க்ரீனிங் செய்யப்படவே இல்லை. அதைத் தொடர்ந்து சோதனைகளும் செய்யப்படவில்லை. நாட்டில் கொரோனா பற்றிய அச்சம் பரவி வரும் நிலையில் முகமூடிகள் போதுமான அளவு இல்லை. இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: