ஞாயிறு, 1 மார்ச், 2020

டெல்லி வன்முறை வழக்குகள்: உச்ச நீதிமன்றம் கண்காணிக்க கோரிக்கை!

மின்னம்பலம் : டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் டெல்லி போலீஸார் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும், எனவே இதில் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒவ்வொரு வழக்கையும் ஆய்வு செய்ய வேண்டுமென்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த சர்மா நேற்று (பிப்ரவரி 29) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “டெல்லியில் நடந்த வன்முறைகள் நாட்டுக்கே தலைகுனிவாக அமைந்துள்ளன. இந்த வன்முறை பற்றி நாம் எப்படி விசாரணை நடத்துகிறோம் என்று உலகமே நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லி போலீஸ் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களைக் கைது செய்கிறது, வழக்கு போடுகிறது. ஒருதலைபட்சமான விசாரணையே இப்போது டெல்லி போலீஸாரால் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் நாட்டின் அரசியலமைப்பின் பாதுகாவலராக உச்ச நீதிமன்றம் இருப்பதால் இதில் தலையிட வேண்டும்.

கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு டெல்லியை எரிக்க அனுமதித்த டெல்லி காவல்துறை இப்போது வெறுக்கத்தக்க பேச்சு என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் சாதாரண மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுகிறார்கள்.
டெல்லி கலவரம் தொடர்பாக டெல்லி போலீஸ் பதிவு செய்த வழக்குகள் அனைத்தையும் ஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில், ‘அமிகஸ் கியூரி’ எனப்படும் மூன்றாவது தரப்பு கண்காணிப்புக் குழுவை நியமிக்க வேண்டும். பதிவு செய்யப்படும் இதுபோன்ற அனைத்து வழக்குகளையும் அவர்கள் ஆராய்ந்து பார்க்கட்டும். இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் திறம்பட தலையிட வேண்டிய நேரம் இது” என்று கேட்டுக்கொண்டார் ஆனந்த் சர்மா.
டெல்லியின் புதிய காவல் துறை ஆணையராக ஸ்ரீவத்சவா பொறுப்பேற்றுள்ள நிலையில் காங்கிரஸிடமிருந்து இப்படி ஒரு கோரிக்கை எழுந்துள்ளது.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: