சனி, 7 மார்ச், 2020

தலித் குடியிருப்பில் கூட வாழ அனுமதிக்கப்படாத ஒரு குடும்பத்தின் தலையெழுத்தை மாற்றிய ..

Image result for பேராசிரியர் அன்பழகன்Skp Karuna : பேராசிரியர் நினைவலைகள்
98 ஆம் ஆண்டு என நினைவு. எங்க தொகுதியில் ஒரு கிராமம். தள்ளி ஒரு காலனி. அதையும் தாண்டி ஒரு கொல்லமோட்டுலே ஏழெட்டு ஓலைக்குடிசை வீடுங்க. அதன் பேர் அருந்ததியர் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டுக்கு ஒரு நாள் போஸ்ட்மேன் செல்கிறார்.
வீட்டில் பக்கவாதம் வந்து படுத்துக் கிடக்கும் ஆண் மற்றும் ஒரு பெண்மணி. அவர்களுக்கு மூன்று பெண்கள். மூவரும் கூலி வேலக்குப் போயிருக்கிறார்கள். தபால்காரர் அந்தப் பெண்மணியிடம் மூன்று கடிதங்களைத் தருகிறார்.
மூன்றுமே அந்த மூன்றுப் பெண்களுக்கும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக நியமித்துள்ள பணியாணைகள்.
இப்படித்தான் ஒரு அஞ்சல்வழியே தலித் குடியிருப்பில் கூட வாழ அனுமதிக்கப்படாத ஒரு குடும்பத்தின் தலையெழுத்தை கலைஞர் ஒரே நாளில் மாற்றினார்.
பதிவு மூப்பின் வழியே மட்டும்தான் பணி அமர்த்த வேண்டும் என வாதாடி பணி ஆணை பிறப்பித்தது அப்போதைய கல்வி அமைச்சர் பேராசிரியர் பெருந்தகை. அப்படியோர் சமூகநீதிப் புரட்சி அதுதான் கடைசி.
மூன்று பெண்களும் அண்ணனை காண வந்தபோது (அப்போது அவர் வீட்டுவசதித் துறை அமைச்சர்), அண்ணியை கேசரி செய்ய சொல்லி, மாவட்ட ஆட்சித் தலைவர், கல்வி அதிகாரிகளை வரவழைத்து பிரியாணி விருந்து பறிமாற வைத்தார். எப்பேர்ப்பட்ட நெகிழ்வான தருணம்!

பின்னர், மூவரும் முதல்வருக்கு நன்றி சொல்ல விரும்பியபோது நான் தான் அவர்களை சென்னைக்கு காரில் (அப்போதெல்லாம் செல்ஃப் டிரைவிங்) அழைத்துச் சென்றேன்.
20 ஆண்டுகள் கழிந்தது., சென்ற தேர்தலில் போது பூத் விசிட் சென்று திரும்பியபோது ஒரு பூத் அதிகாரி பின்னாலேயே வந்தார்.
சொல்லுங்கம்மா?
என்னை நினைவிருக்கா சார்?
நான் புருவம் உயர்த்தினேன்!
வேலை கிடைச்சப்போ சி.எம்மை பார்க்க உங்க கார்லேயே அழைச்சுட்டுப் போனீங்களே!
அட! எப்படிம்மா இருக்கீங்க?
நல்லா இருக்கேன் சார். ___ ஊர் ஸ்கூலில் இப்போ எச்.எம் ஆ இருக்கேன். சார் கலெட்ரேட்லே ஸ்பெஷல் தாசில்தார்
குழந்தைங்க?
ரெண்டும் பையன் சார். பெரியவன் பேர் கருணாநிதி., சின்னவன் அன்பழகன்.
- எஸ்கேபி. கருணா

கருத்துகள் இல்லை: