வியாழன், 5 மார்ச், 2020

ஆறுமுக நாவலரையே உள்வாங்கிய வைதீகம் .. சாதாரண மக்களின் கதி ?

Dhinakaran Chelliah : நாவலரையே உள்வாங்கிய வைதீகம்!
வாழ்நாள் முழுதும் தமிழையும் சைவத்தையும் வளர்த்த பெருமகனார் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலரையே வைதீகம் உள்வாங்கிக் கொண்டது என்றால் வர்ணாசிரம சனாதன தர்ம வேத ஆகமங்களைப் பற்றிய நமது மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்வது நலம்.அவருக்கே இந்த நிலையெனில் சாதாரண சனங்களின் கதி என்னவாகும்?
உதாரணத்திற்கு நாவலர் எழுதிய சைவ வினா விடை (புத்தகம் 1 மற்றும் 2) நூலில் உள்ள ஒரு சில கேள்வி பதில்கள்.
ஆறுமுகநாவலர் அவர்களின் சைவ வினா விடை புத்தகம் 2:
86. வேதத்தை ஓதுதற்கு அதிகாரிகள் யாவர்?
உபநயனம் பெற்றவராகிய பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் முதன் மூன்று வருணத்தார்.
87. சூத்திரரும், நான்கு வருணத்துப் பெண்களும் எதற்கு அதிகாரிகள்?
இதிகாச புராணம் முதலியவைகளை ஓதுதற்கும், வேதத்தின் பொருளைக் கேட்டற்கும் அதிகாரிகள்.
90. சூத்திரர் முதலாயினாருக்கு எக்கிரியைகள் செய்யத் தக்கன?
சிவதீக்ஷை பெற்ற சூத்திரருக்கும் அநுலோமருக்கும் ஆகமக் கிரியைகள் செய்யத்தக்கன. சிவதீக்ஷை பெறாத சூத்திரர் முதலானவருக்குப் பிரணவமின்றி நமோந்தமாகிய தேவ தோத்திரங்களைக் கொண்டு கிரியைகள் செய்யத் தக்கன.
116. சைவர்கள் சாதிபேதத்தினால் எத்தனை வகைப்படுவார்கள்?
ஆதிசைவர்; மகாசைவர்; அநுசைவர்; அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என அறு வகைப்படுவார்கள்.

132. ஆசாரியராதற்கு யோக்கியரல்லாதவர் யாவர்?
நான்கு வருணத்துக்குட்படாதவன், கணவன் இருக்கக் கள்ளக் கணவனுக்குப் பிறந்தவனாகிய குண்டகன், கணவன் இறந்தபின் கள்ளக் கணவனுக்கு விதவையிடத்துப் பிறந்தவனாகிய கோளகன், வியபிசாரஞ் செய்த மனைவியை விலக்காதவன், குருடன், ஒற்றைக்கண்ணன், செவிடன், முடவன், சொத்திக் கையன், உறுப்புக் குறைந்தவன், உறுப்பு மிகுந்தவன், தீரா வியாதியாளன், பதினாறு வயசுக்கு உட்பட்டவன் எழுபது வயசுக்கு மேற்பட்டவன், கொலை களவு முதலிய தீயொழுக்க முடையவன், சைவாகமவுணர்ச்சியில்லாதவன் முதலானவர். (சொத்தி = ஊனம்).
255. நியமகாலத்திலன்றி, இன்னும் எவ்வெப்பொழுது ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்?
சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும், நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங் காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்.(சர்த்தி = வாந்தி)
285. திருநந்தனவனத்தை எப்படிப் பாதுகாத்தல் வேண்டும்?
புலையர், புறச்சமயிகள், தூரஸ்திரீகள், முதலாயினோர் உள்ளே புகாமலும், யாவராயினும் எச்சில் மூக்குநீர் மலசல முதலியவைகளால் அசுசிப்படுத்தாமலும், அங்குள்ள பத்திர புஷ்பங்களைக் கடவுட் பூசை முதலியவற்றிற் கன்றிப் பிறவற்றிற்கு உபயோகப்படுத்தாமலும், மோவாமலும், அங்குள்ள மரஞ் செடி கொடிகளிலே சலந் தெறிக்கும்படி வஸ்திரந் தோயாமலும், அவைகளிலே வஸ்திரத்தைப் போடாமலும் பாதுகாத்தல் வேண்டும்.
287. பத்திர புஷ்பம் எடுக்க யோக்கியர் ஆகாதவர் யாவர்?
தாழ்ந்த சாதியார், அதீக்ஷிதர், ஆசெளச முடையவர், நித்திய கருமம் விடுத்தவர், ஸ்நானஞ் செய்யாதவர், தூர்த்தர் முதலானவர்.
318. மேலே சொல்லப்பட்டவைகளன்றிச் சிவாலயப் பணிகள் இன்னும் உள்ளனவா?
உள்ளன. அவை, திருவீதியில் உள்ள புல்லைச் செதுக்குதல், திருக்கோபுரத்திலுந் திருமதில்களிலும் உண்டாகும் ஆல், அரசு முதலியவற்றை வேரொடு களைதல், திருக்கோயிலையுந் திருக்குளத்தையுந் திருவீதியையும் எச்சில், மலசலம் முதலியவைகளினால் அசுசியடையாவண்ணம் பாதுகாத்தல், திருக்கோயிலினுள்ளே புகத்தகாத இழிந்த சாதியாரும், புறச் சமயிகளும், ஆசாரம் இல்லாதவரும், வாயிலே வெற்றிலை பாக்கு உடையவரும், சட்டையிட்டுக் கொண்டவரும், போர்த்துக் கொண்டவரும், தலையில் வேட்டி கட்டிக்கொண்டவரும் உட்புகா வண்ணந் தடுத்தல், திருவிழாக் காலத்திலே திருவீதியெங்குந் திருவலகிட்டுச் சலந் தெளித்தல், வாகனந் தாங்கல், சாமரம் வீசுதல், குடை கொடி ஆலவட்டம் பிடித்தல் முதலியவைகளாம்.
ஆறுமுகநாவலர் அவர்களின் சைவ வினா விடை புத்தகம் 1:
76.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?
தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.
குறிப்பு: நூல் வேண்டுவோர் உள் பெட்டியில் தொடர்பு கொள்ளலாம்

கருத்துகள் இல்லை: