ஞாயிறு, 1 மார்ச், 2020

300 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ .. தமிழகம் முழுவதும், உரிமம் இல்லாமல் செயல்பட்ட

தமிழகம் முழுவதும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை  300 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைப்பு  தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிரம் தினத்தந்தி :  சென்னை, தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது என்றும் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வேலைநிறுத்தம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிலத்தடி நீரை எடுப்பதற்கான உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம், பெருநகர சென்னை அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம், கோவை குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் கடந்த 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நடத்தி வருகிறார்கள்.


கூடுதல் விலை

குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. சில இடங்களில் குடிநீர் கேன்கள் கிடைப்பதில்லை. சிலர் கூடுதல் விலைக்கு குடிநீர் கேன்களை வினியோகித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் 1,600-க்கும் மேற்பட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் உள்ளனர். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 480 உற்பத்தி ஆலைகள் உள்ளன. குறிப்பாக திருவள்ளூரில் 200-க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன. மேற்கண்ட 4 மாவட்டங்களில் இருந்து மட்டும் தினமும் 10 லட்சம் குடிநீர் கேன்கள் வினியோகிக்கப்படுகின்றன.

அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

இந்தநிலையில் ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, உரிமம் இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

சென்னையில் நேற்று 5 குடிநீர் கேன் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 குடிநீர் ஆலைகளையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 குடிநீர் ஆலைகளையும் அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 19 தனியார் குடிநீர் தொழிற்சாலைகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதேபோல் சேலம் மாவட்டத்தில் 43 குடிநீர் ஆலைகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 28 ஆலைகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஆலைகளுக்கும், ஈரோடு மாவட்டத்தில் 23 ஆலைகளுக்கும், திருச்சி மாவட்டத்தில் 23 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கும், கரூர் மாவட்டத்தில் 8 ஆலைகளுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 ஆலைகளுக்கும், கடலூர் மாவட்டத்தில் 27 ஆலைகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலும் சில குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சில மாவட்டங்களில் குடிநீர் ஆலைகளில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

300 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைப்பு

இப்படி தமிழகம் முழுவதும் சுமார் 300 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர். அவர்களுடைய இந்த நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடிநீர் உற்பத்தி ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருவதை தொடர்ந்து கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சென்னையில் பெரும்பாலும் மக்கள் கேன் தண்ணீரை நம்பியே உள்ளனர். இதுதவிர ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் கேன் தண்ணீரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளதால் கேன் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

நியாயமற்றது
இந்த பிரச்சினை குறித்து பெருநகர சென்னை அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிறுவனர் வி.முரளி கூறியதாவது:-

நிலத்தில் இருந்து குடிநீர் உறிஞ்சி எடுக்கும் உரிமம் வழங்குவது குறித்து 2014-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இது 2014-ம் ஆண்டுக்கு முன்பு உள்ள குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு பொருந்தாது. ஆனாலும் 2014-ம் ஆண்டுக்கு முன்பு குடிநீர் ஆலைகள் தொடங்கியவர்களும் உரிமம் பெறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனால் எங்களுக்கு முறையான குடிநீர் உரிமம் வழங்குவதை விடுத்து குடிநீர் ஆலைகளை சீல் வைப்பது நியாயமற்றது. ஐகோர்ட்டின் உத்தரவு காரணமாக 1,300-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ. உரிமம் பெற்ற 1,400 நிறுவனங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 15 லட்சம் கேன்களில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பேச்சுவார்த்தை

வேலைநிறுத்தத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தண்ணீரை முறையாக எடுக்க உரிமம் கொடுத்து முறைப்படுத்த வேண்டும். இதை செய்தாலே சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சப்படுவது தடுக்கப்படும். ஏனென்றால் கடந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்திலும் குடிநீர் கேன்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரசு திறந்த மனதுடன் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, குடிநீர் எடுக்கும் உரிமம் வழங்க ஆவன செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசு விளக்கம்

இதற்கிடையே தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு வகுத்திருக்கும் வரைமுறைகளின்படி, நிலத்தடி நீர் எடுக்கப்படும் இடங்கள் என்பது அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி, பாதி அபாயகரமான பகுதி, சராசரியான பகுதி என 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதிகளில் குடிநீர் உறிஞ்சி எடுக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதர 2 பகுதிகளில் குடிநீர் ஆலைகள் அமைக்கலாம். அந்த பகுதிகளில் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எனவே கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு அரசு உரிமம் வழங்குவது இல்லை என்ற தகவலில் உண்மை இல்லை. அனுமதி இல்லாத குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமே, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சீல் வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

இந்த நிலையே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார்.

இதுபற்றி கோவையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், “குடிநீர் கேன் விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுப்படி விதிமுறைகளுக்குட்பட்டு அரசு செயல்படும். குடிநீர் கேன் உரிமையாளர்கள் அரசை அணுகுகிற போது அவர்களுக்கு கோர்ட்டு உத்தரவுக்கு உட்பட்டு இந்த அரசு உதவி செய்யும். மேலும் சென்னை மெட்ரோ, குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றை அணுகுகிறபோது குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்

கருத்துகள் இல்லை: