ஞாயிறு, 22 மார்ச், 2020

திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதிக்கு வழங்குகிறார்கள் ..

மின்னம்பலம : முதல்வர் நிவாரண நிதிக்கு திமுக எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, தமிழகத்துக்கு 987 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், பலரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவிகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அளிக்க இருக்கிறார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 22) வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் பரவலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்” என்று தெரிவித்தார்.

தமிழக அரசும், உடனே போதிய நிதி ஒதுக்கீடு செய்து, அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட முன்வரவேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களும் இந்த மனிதநேய முயற்சியில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள ஸ்டாலின்,
“கொரோனா தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் வெளியிடும் சுய ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் இன்று போல் மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி, மிகுந்த விழிப்புணர்வுடனும் சுய சுகாதாரத்தைக் கடைப்பிடித்தும், கொரோனா தொற்று நோய் பரவலை முழுமையாகத் தடுத்திடவும் வேண்டும்” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: