செவ்வாய், 24 மார்ச், 2020

விமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமால் உட்கொள்ளும் தந்திரம்

Corona_testinguseதினமணி : கோவை: ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில் உடல் வெப்பம் அதிகமாக இருந்து தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து தப்பிக்க பலரும் புதிய மோசடியில் ஈடுபட்டு வருவது அம்பலமாகியிருக்கிறது. கோவை சர்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் வந்திறங்கும் பயணிகள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதில், உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் நபர்கள், தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
ஒரு வேளை இந்த உடல் வெப்ப பரிசோதனையின் போது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதில் இருந்து தப்பிக்க, பயணிகள் பலரும், பாராசிடமால் மாத்திரைகளை முன்கூட்டியே போட்டுக்கொண்டு உடல் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது.

இது குறித்து தமிழக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், பயணிகள் யாரும், அரசு வழங்கும் இடத்தில் தங்களை தனிமையில் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. அதே சமயம், தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள ஒப்புக் கொள்கிறார்கள் என்கிறார்.
கரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகவே அரசுகள் இந்த நடவடிக்கையை எடுக்கின்றன. ஆனால், அதில் இருந்து தப்பிக்க இதுபோன்ற முறைகளை மக்கள் யாரும் கையாள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சில பயணிகள் பாராசிடமால் மாத்திரையை சாப்பிட்ட பிறகும், அவர்களுக்கு சராசரியான உடல்வெப்பநிலைதான் இருக்கிறது. அப்படியென்றால், அவர்களது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தது என்பதையே அது காட்டுகிறது. நீங்கள் அதிகாரிகளை ஏமாற்றவில்லை. உங்கள் குடும்பத்தினரை, உறவினர்களை ஏமாற்றப் போகிறீர்கள் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: