சனி, 28 மார்ச், 2020

‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம்புக்கு சீன அதிபர் ஜின்பிங் அழைப்பு

‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம்புக்கு சீன அதிபர் ஜின்பிங் அழைப்பு தினத்தந்தி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் சீன அதிபர் ஜின்பிங் தொலைபேசியில் பேசினார். கொரோனா வைரசை எதிர்த்து ஒன்றுபட்டு போரிடுவோம் என அவர் அழைப்பு விடுத்தார். பீஜிங், சீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் உருவானது. ஆனால் அது பற்றிய பாதிப்பு, வீரியம் குறித்த தகவல்களை சீனா, உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை; மாறாக இதுபற்றிய தகவல்களை வெளியிட்டவர்களை தண்டித்தது என்றெல்லாம் புகார் எழுந்தது. இதில் சீனாவை அமெரிக்கா சாடியது. இந்த வைரஸ் பரவியதில், சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளாததால்தான் இன்றைக்கு உலகமே அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு கருத்து வெளியிட்டார்.


ஆனால் அதற்கு சீனா பதிலடி கொடுத்தது. சீன வெளியுற வுத்துறை செய்தி தொடர்பாளர், அமெரிக்காதான் இந்த வைரசை உகானுக்கு கொண்டு வந்து விட்டதாக கூறினார்.

இப்படிப்பட்ட கருத்து பரிமாற்றங்களால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.

இந்தநிலையில் டிரம்பை சீன அதிபர் ஜின்பிங் நேற்று தொலைபேசியில் அழைத்து பேசினார். இருவரது பேச்சிலும் சமரசம் செய்வதற்கான தொனி ஒலித்ததாக தகவல்கள் கூறு கின்றன.

டிரம்பிடம் ஜின்பிங், உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசுக்கு எதிராக நாம் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒன்றுபட்டு போரிடுவோம் என அழைப்பு விடுத்தார்.

மேலும், “கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களையும், அனுபவங்களையும் அமெரிக்காவுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள சீனா விருப்பம் கொண்டுள்ளது” எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், “சீன, அமெரிக்க உறவுகள் ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இருதரப்பு ஒத்துழைப்புதான் பரஸ்பரம் பலன் தரத்தக்கதாக இருக்கும். அதுதான் சரியான தேர்வாகவும் இருக்கும். சீன, அமெரிக்க உறவுகள் வலுப்படுவதற்கு தேவையான கூடுதலான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்று நம்புகிறேன்” என்றும் டிரம்பிடம் சீன அதிபர் ஜின்பிங் கூறினார்.

சீனாவில் உள்ள சில மாகாணங்கள், நகரங்கள், கம்பெனிகள் அமெரிக்காவுக்கு மருந்துகளை வினியோகிப்பதுடன், தங்கள் ஆதரவை அளித்து வருவதாகவும் டிரம்பிடம் சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சீன அதிபர் ஜின்பிங் தொலைபேசியில் அழைத்து பேசியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் நிலவி வந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: