வெள்ளி, 27 மார்ச், 2020

BBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு

கேரளாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று
தென் இந்திய மாநிலமான கேரளாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காஸர்கோடில் 34 பேரும், கன்னூரில் இருவரும், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் கொள்ளம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 176ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்காலிக பிணவறையாக விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு
கொரோனா வைரஸ் பாதிப்பு பிரிட்டனில் மிகவும் மோசமான சூழலை அடையும் நிலை ஏற்பட்டால், பிர்மிங்ஹாம் விமான நிலையத்தை, 12,000 உடல்களை வைக்கும் வசதியுள்ள தற்காலிக பிணவறையாகப் பயன்படுத்த பிரிட்டன் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஒரு சரக்கு பெட்டகம் மற்றும் இரு முனையங்களை கொண்ட இந்த விமான நிலையத்தில், மோசமான சூழல் ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் 2,500 உடல்கள் வைக்கப்படும்.
"அந்த விமான நிலையத்தை பிணவறையாகப் பயன்படுத்த உண்மையில் நாங்கள் விரும்பவில்லை. எனினும், எதற்கும் தயாராக இருக்கிறோம்," என்று சேன்ட்வெல் கவுன்சிலின் துணை தலைவர் வாசிம் அலி தெரிவித்துள்ளார்.


ரஷ்ய அதிபரின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நிர்வாகத்தில் உள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, கிரெம்ளின் மாளிகை உறுதிபடுத்தியுள்ளது.
67 வயதாகும் அதிபர் புதின், சாதாரணமாக வேலை செய்து வருவதாக, அவருடைய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 196 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதோடு ரஷ்யாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,036ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறை.
ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


11,000 கைதிகளை பரோலில் அனுப்ப முடிவு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக கைதிகள் அதிகம் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தற்காலிகமாக விடுவிக்கப்படவுள்ளனர்.
மூன்றாண்டுக்கு குறைவான தண்டனை பெற்ற 11,000 கைதிகளை பரோலில் அனுப்ப முடிவு செய்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசு. இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிரா.
அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றான டெல்லி திகார் சிறையில் இருக்கும் 3,000 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இவர்களில் பரோலில் வெளியில் வருபவர்களும், வழக்கு விசாரணையில் இருக்கும்போது பிணையில் வெளியில் வருபவர்களும் அடக்கம்.
இந்தியா முழுவதும் உள்ள 1,300 சிறைகளில் மொத்தம் நான்கு லட்சம் சிறைக் கைதிகள் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.இவர்களில் பெரும்பாலானோர் விசாரணைக் கைதிகள்.
இந்த வாரத் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளையும் தங்கள் மாநிலத்தில் இருக்கும் சிறைகளில் கூட்டத்தை குறைக்கும் விதமாக ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்கு குறைவான தண்டனை பெற்றவர்களை பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதனால் கூட்ட நெரிசல்


ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 மரணங்கள்
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 769 பேர் இறந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிகபட்ச மரணங்கள் நடந்தது இதுதான்.
அதற்கு முந்தைய நாள் 655 பேர் இறந்தனர். இதுவரை ஸ்பெயின் நாட்டில் 4,858 பேர் கோவிட்-19 தொற்றால் இறந்துள்ளனர்.
இதுவரை 64,059 பேர் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில் 9,357 பேர் குணமடைந்துள்ளனர்.
டொனால்டு டிரம்ப் - ஷி ஜின்பிங் தொலைபேசி உரையாடல்
டிரம்ப் உடனான தொலைபேசி உரையாடலின்போது, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிராகப் போரிட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறினார் என்று சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
"சீனா இந்த வைரஸால் பல இழப்புகளைச் சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சீனா வலிமையாக புரிந்து வைத்துள்ளது. அவர்களுக்கு என் மரியாதை," என்று சீன அதிபர் உடனான தொலைபேசி உரையாடலுக்கு பிறகு டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை 'சீன வைரஸ்' என்று டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வந்தார். இது இரு நாட்டு உறவில் சலசலப்பை உண்டாக்கியது

இந்தியா வந்த 15 லட்சம் வெளிநாட்டவர்கள்

ஜனவரி 18 முதல் மார்ச் 23ஆம் தேதி வரை 15 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வருகை தந்துள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் குப்தா மாநில அரசுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாவட்ட அதிகாரிகள் மூலம் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை அடையாளம் காணும் பணிகளை முடுக்கிவிட அவர் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவது என்ன?

உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் சீனா கூறும் எண்ணிக்கை குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார். "சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை என்னவென்று உங்களுக்கு தெரியாது," என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இதுவரை 21 அமெரிக்க மாகாணங்கள் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளன.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,828), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அமெரிக்காவில் இதுவரை 85,991 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனினும், உயிரிழப்புகளை பொறுத்தவரை, அமெரிக்காவைவிட (1296) இத்தாலி (8,215), ஸ்பெயின் (4,365) மற்றும் சீனாவில் (3,296) ஆகியவை அதிக இழப்புகளை சந்தித்துள்ளன.

கருத்துகள் இல்லை: