புதன், 25 மார்ச், 2020

ஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து! சரக்கு ரயில்கள் மட்டுமே ஓடும்

ஏப்ரல் 14 வரை ரயில்களும் ரத்து!மின்னம்பலம் : கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஏப்ரல் 14 வரை ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது
அதன்படி, பயணிகள் ரயில்கள், அதிக தொலைவு செல்லும் ரயில்கள் மற்றும், புறநகர் பயணிகள் ரயில்கள் என அனைத்தும் ரயில்களும் 14 ஆம் தேதி வரை இயங்காது. முன்னதாக மார்ச் 31 ஆம் தேதி வரை ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த காலக்கெடு இன்று நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏதும் இருக்காது என மத்திய மாநில அரசுகள் அறிவித்திருந்த நிலையில், பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டாலும் நாடு முழுவதும் பால்,தானியங்கள், பழங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களுக்குத் தடை ஏதும் இல்லை.
மேலும் ரயில்களில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம் ஊதியம் வழங்கப்படுமெனவும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
-பவித்ரா குமரேசன்</

கருத்துகள் இல்லை: