ஞாயிறு, 22 மார்ச், 2020

திருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை? மக்களவையில் தமிழில் கொந்தளித்த நிர்மலா சீதாராமன்.. வீடியோ


tamil.indianexpress.com  : மக்களவையில், ஜம்மு காஷ்மீர் துணை மானிய கோரிக்கையின் போது, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரித்தது ஜனநாயக விரோதமானது என்று...
: மக்களவையில், ஜம்மு காஷ்மீர் துணை மானிய கோரிக்கையின் போது, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரித்தது ஜனநாயக விரோதமானது என்று கூறி விமர்சித்தார். அவருக்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழில் கடுமையாக பதிலளித்தார்.
ஜம்மு காஷ்மீர் துணை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 22) மக்களவையில் நடைபெற்றது. விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.-யுமான திருமாவளவன் பேசுகையில், “ஒரு மாநிலத்தை 3 யூனியன் பிரதேசங்களாகப் கூறுபோட்டு சிதைத்தது. அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. நேர்மைக்கும் எதிரானது. இந்த நிலையில், அரசின் இந்த நடவடிக்கையை, காஷ்மீர், ஜம்மு, லடாக் பகுதியைச் சேர்ந்த மக்கள் எந்தளவுக்கு அதை ஏற்றிருக்கிறார்கள் வரவேற்றிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கின்றபோது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை ஏன் அனுமதிக்க கூடாது என்று நான் இந்த அவையில் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

உண்மையில் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது. ஜனநாயகம் அங்கே எந்தளவுக்கு உயிர்ப்போடு இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மூன்று யூனியன் பிரதேசங்களை மேம்படுத்துவதற்காக அவற்றின் வளர்ச்சிக்காக இந்த அரசு கூடுதலாக நிதி ஒதுக்கியிருக்கிறது என்று பலரும் பாராட்டிப் பேசினார்கள். ஆனால், சுயேச்சையாக சுதந்திரமாக, அந்த மாநில அரசு இயங்கிக்கொண்டிருந்த போக்கு, தடுக்கப்பட்டிருக்கிறது. பறிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. இந்திய அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான வரலாற்றுக்கறை என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று பேசினார்.
அதே போல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சுப்பராயனும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு தமிழில் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் சுப்பராயனுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “சட்டவிரோதமான நடவடிக்கைகள் தாண்டவமாடுகின்றன என்று கூறுகிறார்கள். இப்போதுவரை எஸ்சி, எஸ்டி சமுதாயத்தினருகும் பெண்களுக்கும் உரிமை வழங்கப்படாத நிலையில், ஒருவர்கூட குரல் எழுப்பவில்லை. இடதுசாரி கட்சியைச் சேர்ந்த சுப்பராயன், காங்கிரஸ் கட்சி தோழமைக் கட்சியாக இருந்தபோதிலும், ஜம்மு காஷ்மீரில் நடந்த ஒரு விவகாரத்தில்கூட அவர்கள் தோழமைக் கட்சி என்ற நிலையில் இருந்து இறங்கி, அவர்கள் எங்களுக்கு தோழமைக் கட்சி இல்லை. எங்களுக்கு இந்த விஷயத்தில் அபிப்பிராய பேதம் இருக்கிறது என்று சொல்லி வெளியே வரவில்லை. இப்போது அதைப்பற்றி ஏன் சொல்கிறீர்கள்? இப்போது அதைப்பற்றி ஏன் பேசுகிறீர்கள்? ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படாத நிலையில் அதைவிட்டுவிட்டு நீங்கள் வெளியே வந்தீர்களா? அப்போது பேசினீர்களா? கேள்வி கேட்டீர்களா? அதனால், இப்போது கேட்பது சரியானது இல்லை.” என்று கடுமையாக பதிலளித்தார்.
இதையடுத்து, திருமாவளவன் பேச்சுக்கு பதிலளித்த நிர்மலா சீதாரமன், “ 370வது பிரிவு இருந்தவரை பெண்களுக்கு, தலித் மக்களுக்கு வழங்கப்படாத உரிமைகள் பற்றி அப்போது நீங்கள் கேள்வி கேட்டீர்களா? தலித் மக்களுக்கு வழங்கப்படாத உரிமைகள் பற்றி அப்போது நீங்கள் கேள்வி கேட்காத நிலையில், இன்று டாக்டர் அம்பேத்கர் கூறியதைக் குறிப்பிட்டு பிஎஸ்பி உறுப்பினர் ரித்திஷ் பாண்டே பேசினார். அவர், 370-பிரிவை திருத்துவதற்கு ஏன் ஆதரவு தெரிவித்தோம் என்றால் டாக்டர் அம்பேத்கர் அப்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனால், நாங்கள் இப்போது ஆதரவு தெரிவித்தோம் என்று கூறினார். அப்போது திருமாவளவன் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? உங்களுடைய குரல் அப்போது எங்கே போனது? அப்போது ஏன் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இப்போது தலித் மக்களுடைய உரிமைகள் பற்றி பேசக்கூடிய நீங்கள் அப்போது ஏன் பேசாமல் இருந்தீர்கள்?” கடுமையாக கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை: