செவ்வாய், 24 மார்ச், 2020

31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் நிலையங்கள்.. டிக்கெட் கவுண்ட்டர்களும் அடைப்பு


Velmurugan P - tamil.oneindia.com : திருச்சி: 31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டதால் திருச்சி ஜங்ஷன் நுழைவு வாயில் தடுப்புகள் வைத்து மூடப்பட்டது. டிக்கெட் கவுண்ட்டரும் அடைக்கப்பட்டது. இதேபோல் தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்கள் மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நேற்று ஊரடங்கை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடித்தனர். வீட்டை விட்டு வெளியில் யாரும் வரவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதேபோல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு முழுவதும் 31-ந் தேதி வரை பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் என அனைத்து ரயில்களும் இயக்கப்படாது என அறிவிப்பு வெளியானது
ரயில்கள் ஓடாது என அறிவிப்பு வெளியானதையடுத்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நுழைவு வாயிலில் நேற்று தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது. மேலும் ஜங்ஷன் ரவுண்டானா முன்பு உள்ள அலங்கார வளைவு அருகேயும் ரயில் வே பாதுகாப்பு படையினர் தடுப்புகள் அமைத்தனர். ரயில் வே பாதுகாப்பு படை அலுவலகம் முன்பும் தடுப்புகள் அமைத்து ரயில் வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரயில் நிலையத்தின் உள்ளே நடைமேடைகளுக்கு செல்லும் வழிகளும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

முக்கிய பிரமுகர் நுழைவு வாயில் முன்பு ரயில் வே போலீசாரும், ரயில் வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் மையம் நேற்று மூடப்பட்டது. ரயில்கள் நடைமேடைகளிலும், யார்டிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ரயில் நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இரவில் மின் விளக்குகளும் குறைந்த அளவே எரிந்தன. ரயில் நிலையத்தில் ரயில் வே ஊழியர்கள் ஒரு சிலர் பணியில் இருந்தனர். வருகிற 31-ந் தேதி வரை கவுண்ட்டர்களில் முன்பதிவு டிக்கெட் வினியோகம் கிடையாது. ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் ‘புக்' செய்யலாம் என ரயில் வே அதிகாரிகள் தெரிவித்தனர். 
யு.டி.எஸ். செயலியும் 31-ந் தேதி வரை இயங்காது. தெரியாமல் வந்த பயணிகள் தெரியாமல் வந்த பயணிகள் இதற்கிடையில் ரயில்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டது பற்றி தெரியாத ஒரு சில பயணிகள் நேற்று இரவு 10 மணிக்கு மேல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓடும் என எதிர்பார்த்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்தனர். 
அவர்களை ரயில் வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலைய நுழைவு வாயிலுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தி திருச்சியில் இருந்து புறப்படும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் எந்த ரயில் களும் இயக்கப்படாதது குறித்து எடுத்துக்கூறி அனுப்பி வைத்தனர். இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மக்கள் தவிப்பு மக்கள் தவிப்பு இதேபோல் இரவு 9 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் திருச்சி மத்திய, சத்திரம் பஸ் நிலையங்களில் இருந்து நேற்று இரவும் பஸ்கள் இயக்கப்படவில்லை. மத்திய பஸ் நிலையத்தில் ஒரு சில வெளியூர் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களிடம் நிலைமையை போலீசார் எடுத்துக்கூறினர். ரயில் , பஸ்கள் எதுவும் இல்லாததால் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகள் நேற்று இரவு திருச்சியில் தவித்தனர்.

கருத்துகள் இல்லை: