சனி, 28 மார்ச், 2020

கன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் உயிரிழப்பு .. பிந்திய செய்தி

தினத்தந்தி : கன்னியாகுமரியில் அரசு கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயது நபர் கடந்த 26ந்தேதி மரணம் அடைந்து உள்ளார்.
அவருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது என கூறப்பட்டது. தொடர்ந்து இந்த வார்டில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் வேலை பார்த்து, திரும்பி வந்த 66 வயதான மீனவருக்கு காய்ச்சல் இருந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்தார். சவுதி அரேபியாவில் இருந்து கடந்த 13ந்தேதி ஊர் திரும்பி இருந்த இவருடைய மகன், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளார்.
அதே வார்டில் இருந்த 2 வயது குழந்தை மற்றும் 24 வயது இளைஞரும் இன்று உயிரிழந்தனர். 3 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகளும் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், குமரி மருத்துவமனையின், கொரோனா வார்டில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, ஏற்கனவே இங்கு உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டது. கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 3 பேர் உள்பட 6 பேர் வரை உயிரிழந்து உள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Image.ns7.tv/ : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்வு!  : dhamotharan
தமிழகத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேற்கு இந்திய தீவுகளுக்கு சென்று வந்த, கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோல, பிரிட்டனில் இருந்து வந்த வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த 49 வயதான ஆண் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன்முலம், தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் 2,09,284 பேரிடம் தெர்மல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1,500 பேரிடம் கொரானா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,252 க்கு பாதிப்பு இல்லை எனவும், 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 208 பேரின் முடிவுகளுக்கு காத்திருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

கருத்துகள் இல்லை: