வியாழன், 22 ஜனவரி, 2026

தமிழகத்தில் அதிகரித்து வரும் சிக்குன்குனியா பாதிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை

 minnambalam.com - Pandeeswari Gurusamy ; தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நடமாடும் மருத்துவ விரைவுக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே, மாவட்ட சுகாதார அதிகாரிகள் உரிய கண்காணிப்புடன் கூடிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் உரிய நேரத்தில் சிக்குன்குனியா பரிசோதனைகளை முன்னெடுத்து நோய்ப் பரவலைத் தடுப்பது அவசியம்.



மருத்துவமனைகளில் டெங்கு அல்லது சிக்குன்குனியாவுக்கென பிரத்யேக வார்டுகளை அமைக்க வேண்டும். பாதிப்பைக் கண்டறியும் எலிசா பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களை போதிய அளவு இருப்பில் வைத்திருப்பது கட்டாயம். நடமாடும் மருத்துவ விரைவுக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஆய்வு செய்வதும் முக்கியம்.

வீடுதோறும் கொசு உற்பத்தியைக் கண்காணிப்பதற்கான பணியில் போதிய நபர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். மாவட்ட பூச்சியியல் வல்லுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள் வீடுகள் தோறும் லார்வா புழு உற்பத்தி குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு பதிவான பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகளைச் செய்ய வேண்டும். தேவையான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கும் அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

திடக்கழிவுகளை முறையாக அகற்றுவது கட்டாயம். வாரம் ஒருமுறை தண்ணீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிக்குன்குனியா தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: